புதுடெல்லி:
வேளாண் சட்டங்களுக்கும் எங்களுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்று ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய வேளாண் சட்டங்களின் பயனாளியாக இருப்பதாக ரிலையன்ஸ் தொழில் நிறுவனம் விவசாயிகளின் கோபத்திற்கு ஆளாகியுள்ளது, இதனால் தற்போது ரிலையன்ஸ் நிறுவனம் நாங்கள் நேரடியாக விவசாயிகளிடமிருந்து உணவு தானியங்களை வாங்குவதில்லை, அதுமட்டுமில்லாமல் எந்த விவசாய ஒப்பந்தங்களிலும் இதுவரை ஒப்பந்தம் செய்யவில்லை என தெரிவித்துள்ளது.
இதைப்பற்றி முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தற்போதைய 3 வேளாண் சட்டங்களுக்கும் எங்களுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை, வேளாண் சட்டங்களால் நாங்கள் எந்த விதத்திலும் பயனடையப் போவதில்லை, வேளாண் சட்டங்களின் பயனாளியாக இருப்பதாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் மீது விவசாயிகளின் கோபம் திரும்பியுள்ளது, இதற்கு உடனடியாக அரசு அதிகாரிகளின் தலையீடு தேவை, நாங்கள் எந்தவித விவசாய ஒப்பந்தங்களிலும் சம்பந்தப்படவில்லை, அதுமட்டுமல்லாமல் நாங்கள் பஞ்சாபிலோ, ஹரியானாவிலோ அல்லது இந்தியாவின் வேறு எந்த இடத்திலும் விவசாய நிலங்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வாங்கவில்லை,  இதனால் சம்மந்தமே இல்லாமல் வேளாண் சட்டங்களை எங்களுடன் இணைத்து பேசுவது எங்களுடைய வணிகங்களுக்கும், எங்களுடைய நற்பெயருக்கும் தீங்கு விளைவிப்பதாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.