சென்னை: தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் வரும் 18ந்தேதி முதல்  இ சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.

தமிழ்நாட்டில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம், மறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 115-ஆவது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  நேற்று காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார். அவர் பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் கலைஞர் மகளிர் உரிமைதொகை திட்டத்தை முதலமைச்சர்  ஸ்டாலின் தொடங்கி வைத்து. 13 பேருக்கு கூட்டுறவு வங்கி ஏடிஎம் அட்டைகளை வழங்கினார் முதலமைச்சர்.  தகுதியான பயனாளிகளில் சிலருக்கு முன்கூட்டியே வங்கி கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டது.

முன்னதாக, கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பங்கள் கடந்த ஜூலை மாதம் 24 ஆம் தேதி முதல் கொடுக்கப்பட்டது. ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை முதற்கட்டமாகவும், ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை இரண்டாம் கட்டமாகவும், அடுத்து சிறப்பு முகாம்கள் மூலமாகவும் விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டு, அவை பூர்த்தி செய்யப்பட்டு திரும்ப பெறப்பட்டன. கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி வரையில் இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.  செப்டம்பர் 5 வரையில் ஒரு கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதில் 1 கோடியே 6 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 56.5 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.

எந்தெந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது, எந்தெந்த விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பது குறித்த குறுஞ்செய்தியானது அந்தந்த குடும்ப தலைவிகளின் செல்போன் எண்ணிற்கு அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள்,  அதுதொடர்பான குறுஞ்செய்தி வராத மகளிர் தங்கள் பகுதியில் உள்ள இசேவை மையத்தில் மேல்முறையீடு செய்யலாம் எனவும், இந்த விண்ணப்பங்கள் வருவாய் கோட்டாட்சியரிடத்தில் அனுப்பப்பட்டு பின்னர் அந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் என்றும் சிறப்பு செயலாக்கத்துறை அறிவித்துள்ளது.

குறுஞ்செய்தி வராத 30 நாட்களில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும், “மகளிர் உரிமைத்தொகை பெற தகுதி இருந்தும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள்  18ந் தேதி முதல் இ சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்”,   மேல்முறையீடு செய்த  30 நாட்களில் அதற்கான நடவடிக்கை எடுக்க்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் இணையவழி வாயிலாக மட்டுமே நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 தமிழக அரசு “தகுதியான ஆவணங்கள் மற்றும் தகுதியான மகளிருக்கு கட்டாயம் உரிமைத்தொகை வழங்கப்படும்” “நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்கள் நாளை மறுநாள் முதல் குறுஞ்செய்தியாக 56.6 லட்சம் மகளிருக்கு அனுப்பப்படும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.