பட்டனம்திட்டா

கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாகச் சபரிமலை அமைந்துள்ள பட்டனம்திட்டா மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

தற்போது குமரிக்கடல், தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய தென் மேற்கு-மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நேற்று முதல் மீண்டும் பருவமழை தீவிரம் அடைந்திருக்கிறது.

தற்போது கேரளாவில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அக்டோபர் மாதம் தொடங்கிய பருவமழை தற்போது உச்சத்தை எட்டி உள்ளது. இதனால் கடந்த சில நாட்களாகக் கேரளாவில் தொடர்ந்து மழை பொழிந்து வருகிறது.

சபரிமலை அமைந்துள்ள பத்தினம்திட்டா மாவட்டம் முழுவதற்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. திருவனந்தபுரம், இடுக்கி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், கண்ணூர் மற்றும் காசர்கோடு தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது சபரிமலை சீசன் தொடங்கியுள்ளதால் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து ஐயப்பனைத் தரிசிக்க பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலைக்குச் சென்று வருகின்றனர். அங்குக் கனமழை பெய்து வருவது பக்தர்களுக்கு பெரும் இடர்பாட்டை ஏற்படுத்தி உள்ளது.