போபால்

த்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் நேற்றைய ஆறாம் கட்ட வாக்க்குப்பதிவில் வாக்களிக்கவில்லை.

நேற்று மக்களவை தேர்தலில் ஆறாம் கட்ட வாக்குப்பதிவு 59 தொகுதிகளில் நடைபெற்றது.   இதில் மத்தியப் பிரதேசத்தில் 8 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது.   இதில் போபால் தொகுதியும் ஒன்றாகும்.   இந்த தொகுதியில் மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான திக்விஜய் சிங்  மற்றும் பாஜகவின் பிரக்ஞா தாகுர் உள்ளிட்டோர் போட்டி இடுகிறார்.

இந்த தேர்தலில் திக்விஜய் சிங் போபால் தொகுதி வாக்காளர்களை நேரில் சந்தித்து அதிக அளவில் வாக்களிக்க வேண்டும் எனவும் பயமின்றி வாக்களிக்க வேண்டும் எனவும் ஊக்குவித்துள்ளார்.   அது மட்டுமின்றி தொகுதியில் உள்ள பல வாக்குச்சாவடிகளுக்கு அவர் நேரில் சென்றார்.   ஆனால் திக்விஜய் சிங் நேற்று நடந்த வாக்குப் பதிவில் போது வாக்களிக்கவில்லை.

இது குறித்து திக்விஜய் சிங், “இந்த தேர்தலில் நான் வாக்களிக்காததற்கு மிகவும் வருந்துகிறேன்.    எனது வாக்கு மத்தியப் பிரதேசம் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ளது.   இந்த மாவட்டம் போபாலில் இருந்து சுமார் 130 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.   எனக்கு அவ்வளவு தூரம் பயணம் செய்ய நேரம் கிடைக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.