இந்தியாவில் உள்ள 6 லட்சம் கிராமங்கள் பயன்பெறும் வகையில் 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகளை பிராட்பேண்ட் இன்டர்நெட் மூலம் இணைப்பதை லட்சியமாக கொண்டு செயல்படுத்தப்பட்ட ‘பாரத்நெட்’ திட்டத்தில் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக மத்திய தணிக்கைத்துறை அறிக்கை வெளியிட்டிருப்பதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் க்ஹெரா கூறியுள்ளார்.

‘பாரத்நெட்’ டின் லட்சியத்தைப் பூர்த்தி செய்ய யூனிவெர்சல் சர்வீசஸ் ஆப்ளிகேசன் பண்ட் (Universal Services Obligation Fund – USOF), பாரத் பிராட்பேண்ட் நெட்ஒர்க் லிமிடெட் (Bharat Broadband Network Limited – BBNL) மற்றும் காமன் சர்வீசஸ் சென்டர் (Common Services Centre – CSC) ஆகிய மூன்று வெவ்வேறு துறைகளுக்கு இடையே ஒளிவட கம்பி, தொலைத்தொடர்பு சாதனங்களை நிறுவுவது, செல்லப்படுத்துவது மற்றும் பராமரிப்பது குறித்து 2019 ஜூலை மாதம் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த திட்டத்திற்காக USOF நிதிக்கு 55000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது, ஒளிவட கம்பி (Optical Fibre Cable) புதைப்பது, தொலைத்தொடர்பு சாதனங்களை நிறுவுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு தனியார் நிறுவனங்களை ஒப்பந்தம் செய்த காமன் சர்வீசஸ் சென்டர் அந்நிறுவனங்களைப் பற்றி எந்த ஒரு ஆய்வும் செய்யாமல் பணிகளை வழங்க ஒப்பந்தம் செய்திருக்கிறது.

இந்த நிறுவனங்கள் மூலம் பல்வேறு செலவினங்களில் பல கோடி ரூபாய் எந்தவித தணிக்கையும் இல்லாமல் வாரிவழங்கப்பட்டிருக்கிறது, ஜூலை 2019 முதல் டிசம்பர் 2020 வரை உள்ள காலகட்டத்தில் ரூ, 386.42 கோடி மற்றும் ரூ. 116.5 கோடி என இருமுறை வழங்கப்பட்டிருக்கும் பணத்திற்கு உரிய கணக்கு சமர்பிக்கப்படவில்லை.

மேலும், பல பணிகள் செயல்படுத்தப்படாமலே செயல்படுத்தப்பட்டதாக எழுதிக் கொடுத்து பணத்தை சுருட்டி இருப்பதும் தெரியவந்துள்ளது.

பாரத்நெட் திட்டத்தைப் பயன்படுத்தி இந்த மூன்று துறைகள் மூலம் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக மத்திய தணிக்கைத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த செய்தி தொடர்பாளர் பவன் க்ஹெரா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

“தணிக்கைத் துறையின் இந்த அறிக்கை காரணமாகவே தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்த ரவிசங்கர் பிரசாத்தின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டிருக்கிறதா ? என்பதை பிரதமர் தெளிவுபடுத்தவேண்டும்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசுத்துறைகள் மூலம் பலகோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கும் பாரத்நெட் ஊழலுக்கு ரவிசங்கர் பிரசாதை மட்டுமே பொருப்பாக்கி பலிகடா ஆக்கியிருப்பதன் மூலம், பிரதமர் நரேந்திர மோடி தன்னை அப்பழுக்கற்றவர் என்று காண்பிக்க முயற்சி செய்கிறார் என்று அவர் குற்றம்சாட்டினார்.

“இந்த ஊழலில் தொடர்புடைய நிறுவனங்கள் மீது பிரதமர் மோடி என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்பதை நாட்டு மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்” என்றும் கோரிக்கை வைத்துள்ளார்