சென்னை: தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் செயல்படும் நேரங்களில் மாற்றம் செய்து  தமிழகஅரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் செயல்படும் அனைத்து நியாயவிலை (ரேசன்) கடைகளுக்கும் அரசு அறிவிக்கும் விடுமுறை நாட்கள் தவிர இதர நாட்களில்  செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தற்போது, நியாய விலை கடைகள் செயல்படும் நேரத்தை தமிழகஅரசு மாற்றி உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் செயல்படும் நேரங்களில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை 8:30 – 12:30 மணி வரையும், பிற்பகல் 3 – 7 மணி வரையிலும் ரேஷன் கடைகள் இயங்கும் என்றும், இதர பகுதிகளில் காலை 9 – 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி – 6 மணி வரையும் ரேஷன் கடைகள் இயங்கலாம் என்றும்  தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

சமீபத்தில் சென்னை உயர்நீதி மன்றம், நியாயவிலை கடைகள் செயல்படும் வேலை நேரம் சரியான முறையில் பின்பற்றப்படுவதில்லை என்றும்,  மாவட்டங்களில் நியாயவிலை கடைகள் செயல்படும் வேலை நேரம் குறித்த விவரம் பெரும்பாலான கடை பணியாளர்களுக்கு இன்னும் முழுமையாக தெரியவில்லை . எனவே மாதாந்திர நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கான ஆய்வு கூட்டத்தில் , நியாயவிலை கடைகள் செயல்படும் வேலை நேரம் குறித்து தெரிவித்து,  குறித்த நேரத்தில் நியாயவிலைக் கடைகளை திறந்து செயல்படுத்த உரிய அறிவுரைகள் வழங்கப்பட வேண்டும் என உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.