டில்லி

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் சிபிஐ இயக்குனர் தேர்வுக் குழுவில் இருந்து விலகி உள்ளார்.

சிபிஐ இயக்குனராக பதவி வகித்து வந்த அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் செல்ல மத்திய அரசு உத்தரவிட்டது. இதன் மூலம் சிபிஐ அமைப்பின் தனித்தன்மை கெடுவதாக பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நேற்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமயிலான அமர்வு தீர்ப்பு அளித்தது.

இந்த தீர்ப்பில் சிபிஐ இயக்குனரான அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பியது தவறு என கூறப்பட்டது. அத்துடன் அலோக் வர்மாவை மீண்டும் சிபிஐ இயக்குனராக தொடரலாம் என தீர்ப்பில் அமர்வு தெரிவித்துள்ளது. அதை ஒட்டி 77 நாட்களுக்கு பிறகு அலோக் வர்மா மிண்டும் சிபிஐ இயக்குனராக பொறுப்பு ஏற்றுள்ளார்.

சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா மீது ஊழல் புகார் உள்ளதால் அது குறித்து முடிவு எடுக்க இன்று சிபிஐ இயக்குனர் தேர்வுக் குழு கூடுகிறது இந்தக் குழுவில் உச்சநீதிமன்ற் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இடம் பெற்றுள்ளார். தாம் அலோக் வர்மாவின் வழக்கி விசாரித்த அமர்வில் இடம் பெற்றிருந்ததால் இந்தக் குழுவில் இருந்து விலகுவதாக ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு பதிலாக மற்றொரு நீதிபதியான ஏ கே சிக்ரியை நியமித்துள்ளார்.