ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்போருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும் என அறிவித்துள்ளார். 

ரிசர்வ் வங்கி கடந்த 2009 ஆம் ஆண்டு முதலே10 ரூபாய் நாணயத்தைப் புழக்கத்தில் விட்டது. இந்த நாணயங்கள் பல ஆண்டுகளாக புழக்கத்தில் இருந்தாலும் சில மாவட்டங்களில் இதை வாங்க மறுப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு பேருந்துகளில்கூட நடத்துநர்கள் உட்படப் பலர் வாங்குவது இல்லை

இது குறித்துப் பல  குற்றச்சாட்டுகள் பொதுமக்களால் அளிக்கப்பட்டுள்ளன. இதையொட்டி  ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் ரூ.10 நாணயத்தை வாங்க மறுத்தால் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆணையர் தமது அறிக்கையில்,

“இந்திய அரசால் வெளியிடப்பட்ட நாணயத்தை வாங்க மறுப்பது சட்டப்படி குற்றம். வாங்க மறுக்கும் கடை மீது புகார் அளிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பணி பரிமாற்றத்தின்போது 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதோ பெற மறுப்பதோ சட்டப்படி குற்றமாகும். அதனால், 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தால் 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும்.”” 

என்று குறிப்பிட்டுள்ளார்.