டில்லி:

ர்ச்சைக்குரிய அயோத்தி ராமஜென்ம பூமி விவகாரம் தொடர்பான வழக்கு, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இறுதி விசாரணை நடத்தி வருகிறது. வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில்,  இன்று மாலை 5மணியுடன் முடிவடைகிறது என்று உச்சநீதிமன்றம் அறிவித்து உள்ளது.

உத்தரபிரதேசத்தில் அயோத்தியில் பாபர் மசூதி இருந்த சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா ஆகிய மூன்று அமைப்பினரும் சொந்தம் கொண்டாடி வருகின்றனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதி மன்றம்,  நிலத்தை 3 அமைப்பினரும் சரிசமமாக  பிரித்து எடுத்து கொள்ளும்படி கடந்த  2010ம் ஆண்டு  தீர்ப்பு அளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 14 மேல்முறையீட்டு மனுக்கள் உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு ஏற்கப்பட்டது. உச்சநீதி மன்ற  தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன பெஞ்ச் இந்த வழக்கின் இறுதி விசாரணையை  விசாரித்து வருகிறது.

தினசரி விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று 40வது நாளாக விசாரணை நடைபெறுகிறது. இது தொடர்பாக ஏற்கனவே வழக்கறிஞர்கள் கலந்தாலோசித்து கொடுத்த பட்டியல்படி, அக்டோபர் 18ம் தேதிக்குள் முடிக்கப்படும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில், அயோத்தி வழக்கின் நேற்றைய விசாரணையின்போது,  நாளைக்குள் அனைத்து தரப்பும் வாதங்களை முடிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, இன்று 40வது நாளாக தலைமை நீதிபதி ரஞ்சன்கோகய் தலைமையிலான அமர்வு முன்பாக வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. அப்போது புதிய மனு ஒன்றை தாக்கல் செய்வதற்கு கோரிக்கை எழுந்த போது அதை நீதிபதிகள் ஏற்கவில்லை.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் கூறுகையில், இவ்வளவு நீண்ட விசாரணையே போதும். இன்று மாலை 5 மணியுடன் வாதங்கள் முடிக்கப்படும். அதற்கு மேல் விசாரணை நடைபெறாது என்று அறிவித்தார். இதனால், இன்று மாலை 5 மணிக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு தள்ளி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், நவம்பர் 17ம்தேதி ஓய்வு பெறுகிறார். எனவே, அயோத்தி வழக்கில் அடுத்த ஒரு மாதத்திற்குள் தீர்ப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.