லக்னோ: ராமர் கோவில் கட்ட அரசு ஊழியர்கள் ஒருநாள் ஊதியத்தை வழங்க வேண்டும் என்று உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டு உள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமஜென்ம பூமி வழக்கில் ராமர் கோவில் கட்ட அனுமதி அளிக்கப்பட்டது. அதற்கான அடிக்கல்லும் நாட்டப்பட்டு கோவில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் பல பகுதிகளில் உள்ள இந்து அமைப்புகள் தங்கத்திலான செங்கற்கள், கட்டுமான நிதி என ராமஜென்ம அறக்கட்டளைக்கு நிதி அளித்து வருகின்றனர்.

இந் நிலையில் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலுக்கு அரசு ஊழியர்கள் ஒருநாள் ஊதியத்தை வழங்க வேண்டும் என்று உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டு உள்ளது. இதுகுறித்த உத்தரவை அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: ராமர் கோவில் கட்டுமானத்தில் உத்தரப்பிரதேச மாநில அரசு ஊழியர்கள் ஒவ்வொருவரின் பங்கும் இருக்க வேண்டும். எனவே அரசு ஊழியர்கள் தங்கள் ஒருநாள் ஊதியத்தை ராமர் கோவில் பணிகளுக்கு வழங்க வேண்டும் என்று கூறி உள்ளார்.