சென்னை:
45 வயதுடைய ஆண் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று பெற்று வந்தவரும் குணமடைந்துள்ளார்.

கொரோனா நோய் தொற்றின் காரணமாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இதுவரை 29ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். 100 வயதுடையவர்களையும் குணப்படுத்தி, மூத்த அரசு அதிகாரிகள் என பலரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 24மணி நேரமும் சிறப்பு மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பில் உள்ளதால் உயிரிழப்புகளும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இன்று நூறு நாட்களுக்கு மேல் சசிகிச்சையில் இருந்த இரண்டு பேர் குணமடைந்துள்ளனர். அதில், 37வயதுடைய ஆண் சிடி பரிசோதனையில் நுரையீரல் பாதிக்கப்பட்டு 45நாட்கள் ஐசியூவிலும், 45நாட்கள் ஆக்சிஜன் வசதியுடனும், உயிர் காக்கும் மருத்துவ சிகிச்சையுடன் இருந்தார். அப்பொழுது, pneumothorax நியூமோதொராக்ஸ் கண்டறியப்பட்டு ஐசிடி வடிகால் செய்யும் சிகிச்சையளிக்கப்பட்டது.

அதாவது நுரையீரல் திசு வெடித்ததன் காரணமாக நுரையீரலுக்கு செல்ல வேண்டிய சுவாசக்காற்று நுரையீரல் சுற்றிய பகுதிகளில் நுழையும். இதனால் நுரையீரல் சுருங்கி செயலிழந்து திடீர் மரணம் ஏற்படக்கூடும். இதற்கான சிகிச்சை உடனே வழங்கப்பட்டு காற்று உறிஞ்சு வெளியே எடுக்கப்பட்டதால் அவர் குணமடைந்து நலமுடன் வீடு திரும்பியுள்ளார்.

மேலும், 45 வயதுடைய ஆண் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, 95சதவீத நுரையீரல் தொற்றுடன் 62நாட்கள் ஐசியூவிலும், 40நாட்கள் ஆக்சிஜன் உதவியுடனும் சிகிச்சை பெற்று பெற்று வந்தவரும் குணமடைந்துள்ளார். அவருக்கும் இதே போன்ற நுரையீரல் பாதிப்பு கண்டறியப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது.

கொரோனா நோயாளிகள் உயிரிழந்தால் பிரேத பரிசோதனை செய்ய முடியாது. ஒவ்வொரு கொரோனா மரணத்தை ஆய்வு செய்யும் போது திடீர் மரணங்களுக்கு நிமோதொராக்ஸ் காரணமாக கண்டறியப்பட்டது. எக்ஸ் ரே மூலமாக எளிதாக இதை கண்டறியலாம். ஆனால் அதை துரிதமாக கண்டறிந்து சிகிச்சை வழங்குவது முக்கியம் என்று ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன் தெரிவித்தார்.