வேலூர்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள நளினி நாளை பரோல் விடுப்பில் வருகிறார்.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளியான நளினி கடந்த 28 வருடங்களாகச் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார். அவருடைய மகள் திருமணத்தை ஒட்டி சிறைத்துறையிடம் 6 மாத பரோல் விடுப்பு கோரி இருந்தார். அந்த மனு நிராகரிக்கப்பட்டது. அதனால் நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

 

கொல்லப்படும் முன்பு ராஜிவ் காந்தி

 

சிறை நிர்வாகம் இந்த வழக்கு விசாரணைக்கு நளினியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பல்வேறு காரணம் கூறி மறுப்பு தெரிவித்து வந்தது. நீதிபதி உத்தரவினால் அவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வேலூர் சிறையில் இருந்து கடந்த 5 ஆம் தேதி பலத்த அகவலுடன் அழைத்து வரப்பட்டார். தனது மகள்  திருமணத்துக்காக பரோல் வழங்க வேண்டும் எனக் கண்ணீருடன் அவர் கோரிக்கை விடுத்தார்.

 

அதையொட்டி நீதிமன்றம் அவருக்கு 30 நாள் பரோல் விடுப்பு அளித்தது.. நளினி நாளை சிறையில் இருந்து வெளியே வருகிறார். அவர் வேலூரில்  உள்ள சிங்கராயன் என்பவர் வீட்டில் தங்கி இருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர் பரோல் காலத்தில் செய்தியாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளைச் சந்திக்கக் கூடாது எனவும் மீறினால் பரோல் ரத்தாகி விடும் எனவும் கூறப்பட்டுள்ளது.