ஜெய்ப்பூர்: பிரதமர் மோடியின் வேண்டுகோளை அடுத்து ராஜஸ்தானில் தீபம் ஏற்றிய போது பட்டாசு வெடித்ததால் அவை குடிசைகளில் பட்டு பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டோரின் 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 3வது முறையாக கொரோனா குறித்து மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, ஏப். 5ம் தேதி இரவு 09.00 மணிமுதல் 9 நிமிடங்களுக்கு மக்கள் அனைவரும் வீட்டில் உள்ள விளக்குகளை அணைத்து செல்போன் டார்ச், அகல் விளக்குகள், மெழுகுவர்த்தியை ஏற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதனை அடுத்து இந்தியாவின் முக்கிய பகுதிகளில் முக்கிய நகரங்களில் மக்கள் மெழுகுவர்த்தி மற்றும் தீபங்களை ஏற்றி கொரோனாவுக்கு எதிராக ஒற்றுமை தீபம் ஏற்றினர். தமிழகத்தில் பல இடங்களில் வீடுகளில் தீபம் ஏற்றப்பட்டது.

சில மாநிலங்களில் சிலர் பட்டாசுகளை வெடித்தும் கொரோனாவுக்கு எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரையடுத்து வைஷாலி நகரில் இதேபோன்று தீபம் ஏற்றியவர்கள், ஒரு கட்டத்தில் எல்லை மீறி பட்டாசு வெடித்து தீபாவளியைப் போன்று கொண்டாடினர்.

அவற்றில் சில பட்டாசுகள் பறந்து சென்று அருகில் இருந்த குடிசைகளில் விழ, அவை பற்றி எரிந்து போயின. அதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது எனினும் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.