ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், டி8 மாவட்டத் தலைநகரங்களில் டிசம்பர் 1ந்தேதி முதல் 31ந்தேதி வரை  இரவு நேர பொதுமுடக்கம் (லாக்டவுன்)  அறிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கம், தற்போது பல்வேறு தளர்வுகளுடன் தொடர்ந்து வருகிறது. இதையடுத்து, பல மாநிலங்கள் தளர்வுகளுடனான பொதுமுடக்கத்தை டிசம்பர் மாதம் வரை நீட்டித்து உள்ளன.


ராஜஸ்தான் மாநிலத்தில்  நேற்றுமட்டும் புதியதாக  2,518 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,65,386 ஆக உயர்ந்துள்ளது.  நேற்று மட்டும்  மேலும்  18  பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த இறப்புகள்  2,292  ஆக அதிகரித்து உள்ளது.

மீண்டும் தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், ராஜஸ்தான் மாநிலத்திலும் கொரோனா பரவலைத் தடுக்க தளர்வுகளுடன்ன பொதுமுடக்கம் டிசம்பர் 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் 8 மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் சில இடங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கோட்டா, ஜெய்ப்பூர், ஜோத்பூர், பிகானீர், உதய்பூர், அஜ்மீர், பில்வாரா, நகோரே, பாலி, தோன்க், சிகார் மற்றும் கங்காநகர் உள்ளிட்ட பகுதிகளில் டிசம்பர் 1ம் தேதி முதல் டிசம்பர்  31ம் தேதி வரை இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த ஊரடங்கின் போது, சமூக, அரசியல், விளையாட்டு, கலாச்சார மற்றும மதம் நிகழ்வுகளுக்கு அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.