டில்லி

பரிமலை ரயில் திட்டங்கள் கேரள அரசு ஒத்துழைக்காததால் தாமதம் ஆவதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறி உள்ளார்.

நேற்று நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின்போது சபரிமலை ரயில் திட்டம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.  அப்போது ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சபரிமலை ரயில் திட்டம் பற்றிய கேள்விக்குப் பதில் அளித்தார்.

அமைச்சர் தனது பதிலில்,

“மத்திய அரசு கேரளாவில் ரயில்வே கட்டமைப்பை மேம்படுத்த உறுதி பூண்டுள்ளது. இந்த சபரிமலை ரயில் திட்டம், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கு ரயில் வசதி அளிப்பதை நோக்கமாகக் கொண்டது. 

பல ஆண்டுகளாக முயற்சி செய்த போதிலும், அத்திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துவதிலும், தனது பங்கு நிதியை அளிப்பதிலும் கேரள அரசு போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை. எனவே சபரிமலை ரயில் திட்டம் அடைந்திருக்க வேண்டிய முன்னேற்றத்தை அடையவில்லை. 

சபரிமலை ரயில் திட்டத்துக்கு 2 மாற்று வழித்தடங்கள் தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இதில் ஒரு வழித் தடம், அய்யப்பன் கோவிலுக்கு மிக அருகிலும் மற்றொரு வழித் தடம், கோவிலுக்கு 25 கி.மீ.க்கு முன்பும் முடிவடைந்து விடும். 

இந்த 2 வழித்தடங்களையும் முழுமையாக ஆய்வு செய்த பிறகு இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.  சரியான வழித்தடத்தைத் தேர்வு செய்து, விரிவான திட்ட அறிக்கையும் முடிவடைந்தவுடன், அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்”  

என்று கூறி உள்ளார்.