டெல்லி:

யில்வே தொழிலாளர்களுக்கு 78 நாள் ஊதியத்தை தீபாவளி போனஸாக வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை அளித்து உள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இசிகரெட்டுக்கு தடை உள்பட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில், ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.

ரயில்வே வாரியத்தின் பரிந்துரையின் அடிப்படையில் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் உற்பத்திசார் ஊக்கத்தொகை வழங்க  மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ” தசரா, தீபாவளிப் பண்டிகையை யொட்டி ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் உற்பத்திசார் ஊக்கத் தொகை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஊக்கத்தொகை அறிவிப்பு மூலம் ரயில்வேயில் 11 லட்சம் ஊழியர்கள் பயன் பெறுவார்கள். இதனால் அரசுக்கு கூடுதலாக 2 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும்” எனத் தெரிவித்தார்.