டெல்லி

பிரதமர் மோடி அம்பானி, அதானியின் விருப்பப்படிசெயல்படுவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.

தற்போது நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடந்து வருகிறது. ஏற்கனவே ஐந்து கட்டங்கள் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், 6-ம் கட்ட ஓட்டுப்பதிவு நாளை மறுநாளும், ஏழாம் கட்ட தேர்தல் வரும் ஜூன் 01-ம் தேதியும் நடைபெற உள்ளது.

ஆறு மற்றும் 7 ஆம் கட்ட தேர்தல் நடக்கவுள்ள இடங்களில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.  அவ்வகையில் ராகுல்காந்தி வடகிழக்கு டெல்லியில் காங்கிரஸ் வேட்பாளர் கன்னையா குமாரை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.

பிரசாரத்தின் போது ராகுல் காந்தி,

“தன்னை கடவுள் அனுப்பியதாக கூறும் மோடி 22 தொழிலதிபர்களுக்காக மட்டுமே வேலை செய்கிறார். அம்பானி, அதானியின் விருப்பத்தின் பேரிலேயே பிரதமர் அனைத்தையும் செய்கிறார். ஏழைகளுக்கு சாலைகள், மருத்துவமனை, கல்வி குறித்து கோரிக்கை வைத்தால் மோடி எதுவும் செய்வதில்லை.

இந்த தேர்தல் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பதற்கான தேர்தல். இந்த தேர்தல் வெற்றியின் மூலம் அரசியலமைப்பை மாற்ற விரும்புகிறது என்பதை கடைசியாக பாஜக ஒத்துக்கொண்டுள்ளது. ஒருவேளை இந்திய அரசியலமைப்பை மாற்ற முயற்சித்தால் கோடிக்கணக்கான மக்களின் எதிர்ப்பை பாஜக சந்திக்க வேண்டியிருக்கும்”

என்று பேசியுள்ளார்.