டெல்லி: 5ம் வகுப்பு சிறுவன் ஒருவனுக்கு, விளையாட்டு தேவையான ஷூ வாங்கி தருவதாக உறுதி அளித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அதனை நிறைவேற்றி காட்டி அசத்தி இருக்கிறார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அண்மையில் கன்னியாகுமரி மாவட்டத்தில், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, 5ம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவனுக்கு, விளையாட்டு தேவைக்காக ஷூ வாங்கி தருவதாக உறுதி அளித்து இருந்தார்.

தான் அளித்த வாக்குறுதியின் படி ராகுல் காந்தி, அச்சிறுவனுக்கு புத்தம் புதிய ஷூ ஒன்றை வாங்கி அனுப்பி உள்ளார். இதுகுறித்து சிறுவன் ஆண்டனி பெளிக்ஸ் கூறுகையில், சாலையோரம் நிற்கும் போது, ராகுல்காந்தி தம்பி வா என்று அழைத்து டீ வாங்கிக் கொடுத்தார்.

என்ன படிக்கிறாய், எந்த விளையாட்டில் ஆர்வம் என கேட்டு, ரன்னிங் என்று கூறியதை அடுத்து ஷூ வாங்கி எனக்கு அனுப்பி உள்ளார். அவர் ஒரு விளையாட்டு பயிற்சியாளரை ஏற்பாடு செய்து தருவதாக கூறி உள்ளார்.

அவ்வாறு ஏற்பாடு செய்து கொடுத்தால், நன்றாக இருக்கும். நான் சாம்பியன் ஆன பிறகு அவரை நேரில் சென்று சந்திப்பேன் என்று தெரிவித்துள்ளார்.