டெல்லி:

ராகுலின் ரேப் இன் இந்தியா கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக பெண் எம்.பி.க்கள் நாடாளு மன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அவை சிறிது நேரம் ஒத்தி வைக்கப்பட்டது.

ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. அங்கு நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி,  ‘மேக் இன் இந்தியா’ குறித்து மோடி பேசி வருகிறார். ஆனால், எங்கு பார்த்தாலும், ‘ ரேப் இன் இந்தியா’ ஆக மாறி வருகிறது…  என்று குற்றம் சாட்டியிருந்தார்.

ராகுல்காந்தியின் இந்த பேச்சுக்கு பாஜக கண்டனம் தெரிவித்த நிலையில், இன்று நாடாளுமன்றம் கூடியதும், பாஜக பெண் எம்.பி.க்கள் ராகுலின் பேச்சுக்கு எதிராக போர்க்கொடித் தூக்கி அமளியில் ஈடுபட்டனர்.

அவையில் பேசிய மத்தியஅமைச்சர் ஸ்மிருதி இரானி, வரலாற்றில் முதல்முறையாக, தலைவர் ஒருவர், பெண்கள் பலாத்காரம் செய்யப்பட வேண்டும் என கூறியுள்ளார். இது தான் நாட்டு மக்களுக்கு ராகுல் சொல்லும் செய்தியா? அவருக்கு 50 வயதாக போகிறது. அவரின் இந்த கருத்தை பலாத்காரத்தை ஊக்குவிப்பது போல் உள்ளது,  ராகுலின் பேச்சு இந்தியாவுக்கு அவமானம் என்று கூறினார்.

பார்லி விவகாரத்துறை அமைச்சர் பிரலஹாத் ஜோஷி கூறுகையில், ராகுல், அவரது பேச்சின் மூலம், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பெண்களையும் அவமானப்படுத்தியுள்ளார் என்றார்.

அமளிகளுக்கு இடையே திமுக எம்.பி., கனிமொழி பேசும் போது, ” மேக் இன் இந்தியா” என்ற பிரதமரின் கருத்தை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், நாட்டில் என்ன நடக்கிறது என்பதைத்தான் ராகுல் கூறியுள்ளார். ஆனால், மேக் இன் இந்தியா வரவில்லை. நாட்டில் பெண்கள் பலாத்காரம் செய்யப்படுகின்றனர். இது கவலைக்குரிய விஷயம் என்றார்.

மற்றொரு பாஜக எம்.பி.யான லாக்கெட் சாட்டர்ஜி, மோடி ஜி ‘மேக் இன் இந்தியா’ என்று கூறினார், ஆனால் ராகுல் ஜி ‘ரேப் இன் இந்தியா’ என்று கூறுகிறார்… அவர்,  எங்களை பாலியல் பலாத்காரம் செய்யும் அனைவரையும் வரவேற்கிறார்.. இது இந்திய பெண்கள் மற்றும் பாரத் மாதாவுக்கு அவமானம் என்று ஆவேசமாக பேசினார்.

தொடர்ந்து பா.ஜ., பெண் எம்.பி.,க்கள் ராகுலுக்கு எதிராக கோஷம் எழுப்பியதால், அவை பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது.

ராஜ்யசபா இதே போல், ராஜ்யசபாவில் பா.ஜ., எம்.பி.,க்கள் ராகுலுக்கு எதிராக கோஷம் போட்டனர். அப்போது வெங்கையா நாயுடு கூறுகையில், இந்த அவையில் உறுப்பினராக இல்லாத ஒருவரின் பெயரை, அவையில் உச்சரிக்கக்கூடாது. அவையின் பணிகளை யாரும் தடுக்கக்கடாது கண்டு பாஜக உறுப்பினர்களை கண்டித்து அமரச்செய்தார்.