டெல்லி: கொரோனா தடுப்பூசி ஏற்றுமதியை தடை செய்து அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி போடும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர்  மோடிக்கு காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தி கடிதம் எழுதி உள்ளார்.
நாடு முழுவததும்  கொரோனா வைரஸ் 2-வது அலை வேகமாகப் பரவி வருகிறது. தொடர்ந்து 3 நாட்களாக நாள்தோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  இதனால் தடுப்பூசிகள் செலுத்தும் பணியும் தீவிரமடைந்து உள்ளது. தற்போதைய நிலையில், 45வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகிறது.
 தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக, 18வயதுக்கு மேற்ப்ட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட அனுமதிக்க வேண்டும் என  காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள், வலியுறுத்தி வருகின்றன. மேலும், சில மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை உள்ளதால், அதிக அளவிலான மருந்துகளை வழங்க வேண்டும் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. ஆனால், மாநில அரசின் கோரிக்கையை மத்தியஅரசு ஏற்க மறுத்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த  மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மாநில அரசுகள், தடுப்பூசி மருந்து வழங்குவதில் மத்தியஅரசு பாரபட்சம் காட்டுவதாகவும், பாஜக ஆளும் மாநிலங்க ளுக்கு அதிக அளவிலான தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டு வருவதாகவும், வெளிநாடுகளுக்கு மருந்துகள் அனுப்பி வைப்பதை நிறுத்தி விட்டு நமது மக்களுக்கு வழங்க வேண்டும் என கூறி வருகின்றன.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி  கொரோனா தடுப்பூசி தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.  அதில், நாட்டு மக்களுக்கே தேவையான தடுப்பூசி மருந்துகள் வழங்கப்படாத நிலையில், கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்யும் மத்திய அரசின் செயல் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

கொரோனா தீவிரமாக பரவி வரும் காலத்தில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்படுவது என்பது தீவிரமான பிரச்சினை. இதை கொண்டாட்டமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. மாநிலங்களுக்கு இடையே எந்தவிதமான பேதமும் பார்க்காமல், வேறுபாடு காட்டாமல்,  தடுப்பூசியை போதுமான அளவில் வழங்கி மத்தியஅரசு உதவ வேண்டும்.

நான் கேட்கிறேன்,  காரோனா பரவலால் நம்நாட்டு மக்கள் உயிர்பயத்தால் அச்சத்துடன் இருக்கும்போது, தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வது என்பது சரியான நடைமுறையா.

தடுப்பூசி ஏற்றுமதிக்கு உடனடி தடை விதிக்கப்பட் வேண்டும் என்றும், பிற தடுப்பூசிகளுக்கும்  விரைவான ஒப்புதல் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இருப்பதுடன்,  நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து கொரோனாவுக்கு எதிராகப் போராடி அதைத் தோற்கடிக்க வேண்டும்”  என கூறியுள்ளார்.