டெல்லி

பிரதமர் மோடிக்கும் அதானி, அம்பானிக்கும் என்ன தொடர்பு என தாம் கேட்க விரும்புவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

நாடெங்கு நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக  நடைபெற்று வருகிறது. இதில் 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த மாதம் 19 ஆம் தேதியும், 88 தொகுதிகளுக்கு 2 ஆம் கட்ட தேர்தல் கடந்த மாதம் 26 ஆம் தேதியும், 93 தொகுதிகளுக்கு கடந்த 7 ஆம் தேதி 3 ஆம்  கட்ட தேர்தலும், 96 தொகுதிகளுக்கு கடந்த 13ம் தேதி 4ம் கட்ட தேர்தல் நடைபெற்றது.

அடுத்ததாக 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு மே 20-ம் தேதியும், 6ஆம் கட்ட வாக்குப்பதிவு மே 25 ஆம் தேதியும், 7ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதியும் நடைபெற உள்ளது. கடைசி கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வேட்பு மனுத்தாக்கல் செய்ய மே-14 ஆம் தேதி இறுதி நாள் என்பதால், ஏழாம் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் போட்டியிடுவோர் மே  14 ஆம் தேதி மனுத்தாக்கல் செய்தனர்.

டெல்லியில் வருகிற மே 25 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது.. ராகுல் காந்தி தேர்தல் பரப்புரை பொதுக் கூட்டத்தில்,

” மோடி அரசு தற்போது இருக்கக்கூடிய ஏழை எளிய, பட்டியலின,  பழங்குடியின மக்களுக்கான உரிமைகளை முழுவதும் மாற்ற நினைக்கிறது. ஆனால் காங்கிரஸும் அதன் கூட்டணி கட்சிகளும் அவர்களை பாதுக்காக்க நினைக்கிறது.

மோடி அரசு கடந்த 10 ஆண்டுகளில் உங்களுக்கு என்ன செய்தது? சாந்தினி சவுக் பகுதியில் இருக்கக்கூடிய ஒரு சின்ன கடைக்காவது ஏதாவது ஒரு நலன் செய்து இருக்கிறார்களா? மோடி அரசு கொண்டு வந்த பண மதிப்பிழப்பு மூலம் வணிகர்களுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டது. ரயில் சேவைகளை தனியார் மையமாக்கி உள்ளார் பிரதமர் மோடி.

மக்களுக்கு சேவையாற்றும் அனைத்து நிறுவனங்களையும் தனியார் மயமாக்கி விட்டார்.  இதையெல்லாம் வெறும் 25 முதலாளிகளுக்காகவே மோடி செய்கிறார். பிரதமர் மோடியை பார்த்தால் அவரிடம் ஒரு கேள்வி கேட்பேன், உங்களுக்கும் அதானி அம்பானிக்கும் என்ன தொடர்பு? என்று நான் கேள்வி கேட்பேன்.

தேர்தல் பத்திரத்தின் மூலம் முதலாளிகளிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கிவிட்டு பின்பு அவர்களுக்காக உதவிகளை செய்து வருகிறார் பிரதமர் மோடி. அமலாக்கத்துறை வருமானவரித்துறை போன்ற நிறுவனங்களை ஏவி  சிலரிடம் பணம் பார்க்கிறார்கள். அவர்கள் பணம் கொடுத்தவுடன் அவர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளும் மூடப்படுகிறது.”

என்று தெரிவித்துள்ளார்.