டில்லி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்தியாவின் பலம் விவசாயிகள் தான் எனத் தனது டிவிட்டரில் புகழ்ந்துள்ளார்.

டில்லியிலிருந்து சிம்லா செல்லும் வழியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அரியானா மாநிலம் சோனிபட் மாவட்டத்தில் உள்ள மதினா கிராமத்தில் வேளாண் பணிகள் செய்து கொண்டிருந்த விவசாயிகளுடன் இணைந்து வேலை செய்தார். அப்போது அவர் டிராக்டர் ஓட்டியபடியே விவசாயிகளுடன் உரையாடினார்.

அந்த் நேரம் லேசாக மழை தூரல் விழ அதைப் பொருட்படுத்தாமல் அவர் விவசாயிகளுடன் உரையாடினார். அரியானாவின் சோனிபட் மாவட்டத்தில் விவசாயிகளுடன் இருக்கும் வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ராகுல்காந்தி பகிர்ந்துள்ளார்.

ராகுல் காந்தி அந்தப் பதிவில்,

”இந்தியாவின் பலமே விவசாயிகள் தான். அரியானாவின் சோனிபட்டின் மதீனாவில் நான் சஞ்சய் மாலிக் மற்றும் தஷ்பிர் குமார் என்ற இரு சகோதரர்களை சந்தித்தேன். அவர்கள் விவசாயம் செய்து வருகிறார்கள். அவர்கள் இருவரும் சிறுவயதிலிருந்தே நல்ல நண்பர்களாக இருந்துள்ளனர். பல ஆண்டுகளாக ஒன்றாக சேர்ந்து விவசாயம் செய்து வருகின்றனர். அவர்களுடன் இணைந்து நாங்கள் வயலில் நாற்று நடுவது, விதை விதைப்பது மற்றும் டிராக்டரை பயன்படுத்தி வயலை உழவு செய்வது ஆகிய உதவிகளில் எங்களை ஈடுபடுத்திக் கொண்டோம்.

அவர்களிடம் பல விஷயங்களை சுதந்திரமாக ஆலோசித்தேன். அந்த கிராமத்தில் உள்ள விவசாயத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் எங்கள் மீது அதிக அன்பு செலுத்தினார்கள். எங்களை அவர்களது குடும்பத்தில் ஒருவராக நினைத்து அவர்கள் வீட்டில் செய்த உணவை எங்களுக்கு வழங்கினார்கள்.

இந்தியாவின் விவசாயிகள் மிகவும் நேர்மையானவர்கள். அவர்களுக்கு எப்படி கடுமையாக உழைக்க வேண்டும் என்பதும் தெரியும், அதே நேரத்தில் அவர்களது உரிமைகளை அங்கீகரிக்கவும் தெரியும். அவர்களது உரிமைகளுக்காக மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்தும், குறைந்தபட்ச ஆதார விலை உரிமைக்காகவும் உறுதியாகப் போராடினர். அவர்கள் கூறுவதைக் கேட்டால், அவர்களை புரிந்து கொண்டால் நாட்டின் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும். இந்தியாவை ஒருங்கிணைக்க விவசாயிகள் மிக முக்கிய பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.:

 என பதிந்துள்ளார்.