ண்டிகர்

டில்லி சலோ பேரணியில் காயமடைந்த விவசாயிக்கு ராகுல் காந்தி நாங்கள் இருக்கிறோம் என ஆறுதல் தெரிவித்துள்ளார்.

நாடெங்கும் உள்ள விவசாயிகள் வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிப்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி சலோ என்ற பெயரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அம்பாலா என்ற இடத்திற்கருகே ஷம்பு எல்லைப் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

காவல்துறையினர் விவசாயிகளை கலைந்து போகும்படி கூறியும் அவர்கள் திரும்பிச் செல்லாத நிலையில், அவர்களை நோக்கி கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.  இதனால், விவசாயிகள் கலைந்து ஓடி பலர் காயமடைந்தனர். ஒரு சிலர் காவல்துறையினரை நோக்கி கற்களை வீசி எறிந்ததில் காவல்துறையினரும் காயமடைந்தனர். இந்த மோதலில், காவல்துறை தரப்பில் துணை காவல் சூப்பிரெண்டு உள்பட 24 பேரும், விவசாயிகள் தரப்பில் 60 பேரும் காயமடைந்து உள்ளனர்.

டில்லி சலோ பேரணியில் கலந்து கொண்டு, காயமடைந்த விவசாயி ஒருவரிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொலைப்பேசி வழியே இன்று பேசினார்.

முன்னாள் ராணுவ வீரரான அந்த விவசாயியிடம் ராகுல் காந்தி பேசும்போது,

“இது முற்றிலும் தவறு. நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். வருத்தப்படாதீர்கள்\. நீங்கள் நாட்டுக்கு முக்கியத்துவம் வாய்ந்த விஷயத்திற்காகப் போராடுகிறீர்கள். நீங்கள் இதற்கு முன்பும் நாட்டுக்காக உழைத்து இப்போதும் அதனை நன்றாகச் செய்து வருகிறீர்கள். நன்று.  உங்களுக்கு அதிர்ஷ்டம் ஏற்படட்டும்”

என்று கூறி உள்ளார்.

மேலும் அவர், உங்களுக்கு உடலில் எந்த பகுதியிலெல்லாம் காயம் ஏற்பட்டது என்று விவசாயியிடம் கேட்டறிந்து கொண்டார். தவிர காவல்துறையினரின் நடவடிக்கையில் போராட்டத்தில் ஈடுபட்ட எத்தனை பேருக்குக் காயம் ஏற்பட்டது என்றும் கேட்டுத் தெரிந்து கொண்டார்.

டில்லி நோக்கி பேரணி செல்லும் போராட்டத்துக்கு சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. டில்லிக்குப் பஞ்சாப், அரியானா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்து விவசாயிகள் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் சென்றுள்ளனர்.

இன்றும் போராட்டம் நீடித்து வரும் நிலையில், மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளது.