பெங்களூரு

ழல் தடுப்பு குறித்து கர்நாடகாவில் மோடி ஏன் பேசுவதில்லை எனக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வினா எழுப்பி  உள்ளார்.

இந்த மாதம் 10 ஆம் தேதி அன்று 224 தொகுதிகள் கொண்ட கர்நாடகா சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை வரும் 13-ஆம் தேதி நடைபெறுகிறது. இதனால் கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  இன்று ராகுல் காந்தி தீர்த்தஹல்லியில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசி உள்ளார்.

அப்போது ராகுல் காந்தி “தற்போது கர்நாடகாவில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு 3 ஆண்டுகளுக்கு முன்னா ல் ஜனநாயகத்தைச் சிதைத்து, ஆட்சி அதிகாரத்தைத் திருடிக் கொண்டது.  , கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த அரசு மக்களுக்காக என்ன நன்மை செய்தது என்பது தெரியவில்லை.  இங்குப் பிரச்சாரத்துக்கு வரும் பிரதமரும் அதைப் பற்றிப் பேசுவதில்லை.

கர்நாடகா மாநிலத்தில் உதவி ஆய்வாளர்கள் தேர்வில் பெருமளவில் ஊழல் நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. பிரதமர் மோடி அதைப் பற்றி கண்டு கொள்ளவே இல்லை.  பாஜகவை ’40 சதவீத கமிஷன் அரசு’ என்று அழைக்கிறார்கள்.  மோடிக்கு இவை எல்லாம் தெரியும். ஆனால் பிரதமர் இங்கு வந்து இந்த மோசடிகள் பற்றிப் பேசுவதில்லை.

சிறு குழந்தைக்குக் கூட இங்குள்ள ஊழல் தெரியும் என்றால், பிரதமருக்கு எப்படித் தெரியாமல் போகும்? இதுவரை இங்கு ஊழலைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தார் என்பதை மக்கள் அறிய விரும்புகிறார்கள். எத்தனை பேரைப் பதவி நீக்கம் செய்தீர்கள் என்பதை எல்லாம் மக்களிடம் சொல்லுங்கள்” என உரையாற்றி உள்ளார்.