ஒரிசா புவனேஷ்வரில் அமைக்கப்பட்டுள்ள புருஷா கமிஷன்

ஐதராபாத்:

கொடுமைக்கார மனைவிகளிடம்  மாட்டிக்கொண்டு அவதிப்படும் கணவன்மார்களை காப்பாற்ற   ‘புருஷா கமிஷன்’ அமைக்க வேண்டும் என்று ஆந்திர மகளிர் ஆணையத் தலைவி நன்னாபேனி ராஜகுமாரி வலியுறுத்தி உள்ளார்.

மத்திய, மாநில அரசுகள் பெண்களுக்கு எதிராக கொடுமைகளில் இருந்து அவர்களை காப்பாற்ற பல்வேறு ஆணையக்ளை அமைத்துள்ள நிலையில், ஆண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் புருஷா கமிஷன் அமைக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட ஆண்களிடம் இருந்து பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது ஒருசில மாநிலங்களில் இந்த புருஷா கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆந்திராவிலும் புருஷா கமிஷன் அமைக்க வேண்டும் என்றும், நாடு முழுவதும் புருஷா கமிஷன் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆந்திர மாநில மகளிர் ஆணையத் தலைவி நன்னாபேனி ராஜகுமாரி வலியுறுத்தி உள்ளார்.

மனைவிகளின் டாச்சர் தாங்காமல் மிகுந்த கஷ்டப்படும் ஆண்களை மீட்க இந்த ஆணையம் அமைக்கப்பட வேண்டியது அவசியம் என்றும், உலகில் கோடிக்கணக்கான ஆண்கள் கண்ணீர் மல்க காத்திருக்கின்றனர் என்றும் கூறி உள்ளார்.

‘புருஷா கமிஷன்’ ஆணையம்  பெண்களின் அராஜகத்திலிருந்து ஆண்களை காக்க  துணை நிற்கும் என்றும்,  தவறான உறவை நம்பி போகும் மனைவிகள் ஆண்களை கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் இவற்றை தடுக்கவே ‘புருஷா கமிஷன்’ அமைக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ஆண்களுக்கும் சமமான அளவு நியாயம் கிடைக்கவும், ஆண்கள் மீது பொய்யான வழக்குகள் பதியப்படுவதை தடுக்கவும், இந்த கமிஷன் சில மாநிலங்களில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.