அமிர்ந்தசரஸ்: கோவில் திருவிழாவில் பக்தர்களுக்கு பிரசாதமாக மதுபானம் வழங்கப்பட்ட நிகழ்ச்சி ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

பொதுவாக கிராமப்புறங்களில் உள்ள சுடலைமாடன் போன்ற காவல்தெய்வங்களுக்கு தேங்காய் பழத்துடன், மது, கருவாடு போன்றவை வைத்து படைப்பது வழக்கமான நடைமுறை. ஆனால், பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு கோவில் திருவிழாவில், பக்தர்களுக்கு மதுபானம் வழங்கிய சம்பவம் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் மாவட்டத்திற்கு உட்பட்ட போமா கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவின்போது, பக்தர்களுக்கு ‘பிரசாதமாக’ மதுபானம், வழங்கப் பட்டது. அங்குள்ள பாபா ரோட் ஷா என்ற கோவில் சன்னதியில் மக்களுக்கு மதுபானம்   ‘பிரசாதமாக’ விநியோகம் செய்தனர். கோயிலுக்கு வந்த பக்தர்கள், இதற்காக பாட்டில்கள், பாத்திரங்களை கொண்டுவந்து, போட்டி போட்டு மதுபானங்களை வாங்கிச் சென்றனர். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

உண்மையிலேயே சாமிக்காக வேண்டிக்கொண்டுதான் மதுபானத்தை பொதுமக்களுக்கு  பிரசாதமாக கொடுத்தார்களா அல்லது பஞ்சாபில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்துள்ளதை கொண்டாடும் வகையில் மதுபானங்கள் வழங்கப்பட்டதா என்பது தெரியவில்லை.