புனே: போக்குவரத்து விதிகளை மதிப்பதை ஊக்குவிக்கும் வகையில், ரூ.100 மதிப்பிலான வவுச்சர் வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது புனே போக்குவரத்து காவல்துறை.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; புனே நகரில் போக்குவரத்து காவலரால் மறிக்கப்படும் ஒரு வாகன ஓட்டி, மின்னணு செலுத்துச் சீட்டு விஷயத்தில் எந்த நிலுவையும் இல்லாமல், அனைத்து போக்குவரத்து ஆவணங்களையும் சரியாக வைத்திருந்தால், அவர் ரூ.100 மதிப்பிலான வவுச்சர் பெறுவதற்கு தகுதியானவர்.

இந்த வவுச்சரை, நகரின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஷாப்பிங் மால்கள் மற்றும் ஹோட்டல்களில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும், போக்குவரத்து காவல்துறை சார்பில், ஒரு ஆன்லைன் அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது.

இதன்படி, தகுதிவாய்ந்த நபர்களுக்கு, 12 இலக்க குறியீடு எஸ்எம்எஸ் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். அதை சம்பந்தப்பட்டவர், மேற்கூறியவாறு தேர்வுசெய்யப்பட்ட இடங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.