புதுச்சேரி,

புதுச்சேரியில் பா.ஜ.க.வினரை புறவாசல் வழியாக நியமன  எம்.எல்.ஏ.க்களாக நியமித்த விவகாரம் தொடர்பாக இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதைத்தொடர்ந்து புதுச்சேரி வெறிச்சோடி காணப்படுகிறது. இந்நிலையில், புதுச்சேரிக்கு சென்ற தமிழக அரசு பஸ்மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

மக்களால் தேந்தெடுக்கப்பட்ட அரசு, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது. ஆனால், அரசு  ஆலோசனையின்றி கவர்னர் கிரண்பேடி தன்னிச்சையாக செயல்பட்டு வருவதாக கூறி ஆளும் காங்கிரஸ் கட்சி, எதிர்க்கட்சிகள்  இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன.

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை திரும்பப் பெற வலியுறுத்தி காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சிகள் சார்பில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது

மாநிலம் முழுவதுமும் பெட்ரோல் பங்குகள் , தியேட்டர்கள், ஹோட்டல்கள்  அடைக்கப்பட்டு உள்ளன. பஸ்கள், ஆட்டோக்கள் ஓடாததால் புதுச்சேரி வெறிச்சோடி காணப்படுகிறது.  பெரும்பாலான பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன.

கிரண்பேடியின் நடவடிக்கையை எதிர்த்து தி மு க , இந்திய கம்யூனிஸ்ட்,விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் உட்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

போராட்டத்தின்போது கவர்னர் கிரண்பேடியின் உருவ பொம்மையை போராட்டக்காரர்கள்  எரிக்க முயன்றனர். ஆனால், அதை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இந்நிலையில், தமிழகத்தில் இருந்து புதுச்சேரி சென்ற தமிழக அரசு பஸ், புதுச்சேரி எல்லையில் மர்ம நபர்களால் கல்விசி தாக்கப்பட்டது. இதையடுத்து பஸ் போக்குவரத்து புதுச்சேரி எல்லையிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.