புதுடெல்லி:
மைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோ குறித்து விசாரணை நடத்த கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

பொதுநல வழக்கை விசாரணைக்கு ஏற்க மறுத்து தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு. பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரம் விசாரணைக்கு உகந்தது அல்ல என உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

இதுதொடர்பான விசாரணையின்போது, ஆடியோ மீது நடவடிக்கை எடுப்பதற்கான என்ன ஆதாரம் உள்ளது என தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கேள்வி எழுப்பினார். மேலும் அவர் கூறுகையில், முற்றிலும் அபத்தமான bogus மனு இது, யாரோ தெருவில் போவோர் பேசிய செய்தியை அடிப்படையாக கொண்டு போலியான, அபத்தமான அரசியல் உள்நோக்கம் கொண்ட மனுக்களை எடுத்து வராதீர்கள்.

அரசியல் காரணங்களுக்காக உச்ச நீதிமன்றத்தை பயன்படுத்தாதீர்கள் என கடும் கண்டனம் தெரிவித்தார். உறுதி செய்யப்படாத ஆடியோவை வைத்து உச்சநீதிமன்றத்தை அரசியல் மேடையாக்குவதா? எனவும் காட்டமாக கேள்வி எழுப்பி கோடம்பாக்கத்தை சேர்ந்த பிரானேஷ் ராஜமாணிக்கம் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

ஆடியோ விவகாரம் தொடர்பாக மத்திய அரசு விசாரிக்க உத்தரவிட வேண்டும் என கோரி பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். இதனிடையே, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதியமைச்சராக இருந்தபோது அவர் பேசியதாக ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அந்த ஆடியோவில் உதயநிதி ஸ்டாலினும், சபரீசனும் 2 ஆண்டுகளில் அதிகமாக பணம் சம்பாதித்துள்ளனர் என்றும் தோராயமாக ரூ.30 கோடி இருக்கும் எனவும் கூறியது போல் வெளியாகியிருந்தது.

இந்த ஆடியோ வெளியாகி தமிழக அரசியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பழனிவேல் தியாகராஜன் நிதித்துறை அமைச்சர் பதவியில் இருந்து தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டார். ஆனால் இந்த ஆடியோ பொய்யானது என்று பழனிவேல் தியாகராஜன் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், இந்த ஆடியோ விவகாரம் தொடர்பாக மத்திய அரசு விசாரிக்க வேண்டும் எனவும் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் தற்போது அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்து தள்ளுபடி செய்தது.