ஸ்ரீஹரிகோட்டா:

ஸ்ரோவின் அடுத்த தயாரிப்பான கார்ட்டோசாட்-3 செயற்கைக்கோள், வரும் 25ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சிநிறுவனமான இஸ்ரோ தெரிவித்து உள்ளது.

இந்த செயற்கைகோள் . பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படுகிறது.

இஸ்ரோ ஏற்கனவே கார்டோசாட் 2 செயற்கைகோளை, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து  பிஎஸ்எல்வி சி-38 ராக்கெட்டுடன் கடந்த 2017ம் ஆண்டு  ஜூன் 23ந்தேதி விண்ணில் செலுத்தியது.

இந்த நிலையில், கார்ட்டோசாட் – 3 செயற்கைகோளை பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட் மூலம் வரும் 25ந்தேதி விண்ணில் செலுத்த தயாராகி உள்ளது. இந்த செயற்கைக்கோள் 509 கிலோமீட்டர் உயர சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டு, நாட்டின் சீதோஷ்ண நிலை மற்றும், பூமியில் உள்ள ஒவ்வொரு பொருளையும் அதி துல்லியமாக படம் பிடித்து அனுப்பும் என்று தெரிவித்துள்ள இஸ்ரோ, இந்த செயற்கைகோள் மூலம் அண்டை நாடுகளின் ராணுவ நிலைகள், பயங்கவாதிகளின் பதுங்கு குழிகள், மறைவிடங்கள் போன்றவற்றையும் துல்லியமாக படம்பிடித்து அனுப்பும் என்றும் தெரிவித்து உள்ளது.

கார்ட்டோசாட் – 3 செயற்கைகோள் உடன், அமெரிக்காவின் 13 நானோ செயற்கைக்கோள்களும் செலுத்தப்படு கின்றன.

அதையடுத்து, ராணுவ கண்காணிப்பை வலுப்படுத்தும் நோக்கில் வரும் டிசம்பர் மாதம்  ரிசாட்-2BR1 செயற்கைக் கோள் பிஎஸ்எல்வி சி-48 ராக்கெட் மூலமும், ரிசாட்-2BR2 செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட் மூலமும் விண்ணில் ஏவப்பட உள்ளது என்றும் இஸ்ரோ தெரிவித்து உள்ளது. இந்த செயற்கைக்கோளில் உள்ள காமிராக்கள்,  மேக மூட்டமாக இருந்தாலும், இரவு நேரங்களிலும் ஊடுருவி படம் பிடிக்கும் திறன் கொண்டது. எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவல், எல்லைக்கு அருகே தீவிரவாதிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க இந்த இரு செயற்கைக்கோள்களும் உதவும். இதற்கு முன்னர் ஏவப்பட்ட ரிசாட் செயற்கைக்கோள்கள் மூலம் எடுக்கப்பட்ட படங்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் நிகழ்த்தப்பட்ட சர்ஜிக்கல் தாக்குதலுக்கு உதவியுள்ளன.

டிசம்பரில் செலுத்தப்பட ரிசாட் வரிசை செயற்கைக்கோள்களுடன், ஜப்பான், லக்சம்பர்க், அமெரிக்காவை சேர்ந்த நிறுவனங்களின் 10 செயற்கைக்கோள்களும் செலுத்தப்பட உள்ளன.

‘இஸ்ரோ வரலாற்றில் ஒரே ஆண்டில் ராணுவ பயன்பாட்டிற்கான 3 செயற்கைக்கோள்கள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.