சென்னையில் தற்போது சர்ச்சையில் சிக்கியிருக்கும் பத்ம சேஷாத்ரி பள்ளி தொடர்பாக பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் அடுத்தடுத்து வந்து கொண்டிருக்கின்றன.

சென்னை கே.கே.நகரில் இயங்கி வரும் பத்ம சேஷாத்ரி பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் மீது இப்போது வரை 30 மாணவிகள் பாலியல் தொல்லை புகார் கொடுத்துள்ளனர்.

ஆசிரியரின் பாலியல் தொந்தரவு தொடர்பாக பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பள்ளி நிர்வாகத்தினருக்கு கடிதம் அனுப்பியபோதும், சமூக வலைத்தளங்களில் பார்த்து தெரிந்து கொண்டு தான் அந்த ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்ததாக அந்த பள்ளி நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருந்தது.

இதிலிருந்தே இந்த பள்ளியின் அணுகுமுறை எப்படி பட்டது என்பது அனைவருக்கும் தெரிந்துள்ளது. மேலும், இதுபோன்ற அணுகுமுறையை கடந்த காலங்களிலும் கடைப்பிடித்து வந்திருக்கிறது இந்த பள்ளி என்பதற்கு சமூக வலைத்தளங்களில் பல்வேறு ஆதாரங்களை பதிவிட்டு வருகின்றனர்.

இசையமைப்பாளர் ஏ..ஆர். ரஹ்மான் சில ஆண்டுகளுக்கு முன் அளித்த பேட்டி ஒன்றில், தாம் படித்த பள்ளியில் கட்டணம் கட்ட முடியாததால் தெருத்தெருவாக பிச்சை எடுக்க சொன்னார்கள் என பள்ளியின் பெயரை குறிப்பிடாமல் தெரிவித்திருந்தார்.

https://twitter.com/trolee_/status/1396861852223610886

சமீபத்தில் ஏ.ஆர். ரஹ்மான், ஆஸ்கார் விருது பெற்றபோது, ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் மதுவந்தி, எங்கள் பத்ம சேஷாத்ரி பள்ளியின் டிராப் அவுட் ஸ்டூடண்ட் தான் ஏ.ஆர். ரஹ்மான் என பெருமிதம் பேசியிருந்தார். இப்போது இந்த 2 வீடியோக்களுமே சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதேபோல், 11 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையில் ஒய்.ஜி. மகேந்திரனின் நாடக பொன்விழா ஆண்டை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் அப்போதைய முதல்வர் மறைந்த கருணாநிதி பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் பேசிய கருணாநிதி, ஒய்.ஜி. மகேந்திரன் குடும்பம் நடத்தும் பத்ம சேஷாத்ரி பள்ளியின் பெயரை சொல்லாமல் அந்த பள்ளியில் தங்களுக்கு நேர்ந்த அனுபவத்தை தமக்கே உரிய பாணியில் சாதுரியமாக அம்பலப்படுத்தினார்.

அந்த நிகழ்ச்சியில் கருணாநிதி பேசியதாவது: என்னை மகேந்திரன் அழைத்த போதுகூட, அவருடைய தாயார் மற்றும் அவருடைய குடும்பத்தார் எல்லாம் வீட்டிற்கு வந்திருந்தார்கள். மிகவும் உரிமையோடு ‘நீங்கள் வந்து தான் தீரவேண்டும்’ என்று அவர்கள் கேட்டபோது, அவர்களுடைய காதிலே விழாமல் என்னுடைய மனைவி- ‘என் பேரனுக்கு ஒரு சீட் உங்கள் பள்ளியிலே தர முடியாது என்று மறுத்துவிட்டீர்கள். இப்போது வந்து அவரைக் கூப்பிடுகிறீர்களே’ என்று சொன்னபோது, நான் அவருடைய வாயைப் பொத்தி, ‘சும்மா இரு’ என்று, இப்போது இந்த நாடகத்திலே பார்த்தது மாதிரி, மனைவியின் வாயைப் பொத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

இதை சொல்வதற்கு என்ன காரணம் என்றால், நான் அதை ரசித்தேன், அவர் சொன்னதை அல்ல- அவ்வளவு கண்டிப்பாக, அமைச்சர் வீட்டுப் பிள்ளையாக இருந்தாலும், பேரனாக இருந்தாலும் சட்டப்படி தான் நாங்கள் பள்ளியில் இடம் தருவோம், நடந்து கொள்வோம் என்பதை அவ்வளவு கண்டிப்பாக கடைப்பிடித்த காரணத்தால் தான். இவ்வாறு கருணாநிதி நாசூக்காக தமது பேரனுக்கு சீட் தர மறுத்த ஒய்.ஜி. குடும்பத்தினர் பள்ளியை பொதுமேடையிலேயே எக்ஸ்போஸ் செய்திருந்தார். அதுதான் அன்று தலைப்பு செய்தியாகவும் ஊடகங்களில் இடம்பெற்றது.

இப்படி கண்டிப்புக்காக முன்னாள் முதல்வர் கருணாநிதியால் பாராட்டப்பட்ட பள்ளி, கடந்த 27 ஆண்டுகளாக பணிபுரியும் ஒரு ஆசிரியரால், தலைகுனிவை சந்தித்திருப்பதோடு அவரை நியமித்த நிர்வாகிகளுக்கும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.