டில்லி:

பத்மாவத் திரைப்படத்திற்கு எதிரான போராட்டம் தொடரும் என்று கார்னி சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.

கார்னி சேனா அமைப்பின் மும்பை கிளை ‘பத்மாவத்’ திரைப்படத்திற்கு எதிரான போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தது. இதன் தலைவர் யோகேந்திர சிங் இது தொடர்பான கடிதத்தை பத்மாவத் திரைப்பட குழுவினருக்கு அனுப்பிவைத்துள்ளார்.

இந்நிலையில் கார்னி சேனா அமைப்பின் தலைவர்கள் லோகேந்திர சிங் கால்வி, சுக்தேவ் சிங் கோமெதி ஆகியோர் கூறுகையில், ‘‘ பத்மாவத் திரைப்படத்தின் மீதான எங்களது ஆட்சேபம் இன்னும் நீடிக்கிறது. அந்த படத்துக்கு எதிரான போராட்டம் தொடரும்’’ என்றனர்.

மேலும், அவர்கள் கூறுகையில், ‘‘இது போன்ற ஒரு வழிகாட்டுதல் மும்பை கிளைக்கு வழங்கப்படவில்லை. அந்த கடிதத்தில் கையெழுத்திட்ட அனைவரும் அமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்’’ என்று தெரிவித்துள்ளனர்.

கார்னி சேனா அமைப்பு பல்வேறு பெயர்களில் நாடு முழுவதும் செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மும்பை கிளை நிர்வாகிகள் கையெழுத்திட்ட கடிதம் சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.