போராட்டம் நடத்தும் அரசு ஊழியர்களிடம் சட்ட பஞ்சாயத்து இயக்கம் கீழ்க்கண்ட கேள்விகளை வைத்துள்ளது.

இக்கேள்விகளுக்கு அவர்கள் பதில் அளித்தால் பிரசுரிக்க தயாராக இருக்கிறோம்.

சட்டபஞ்சாயத்து இயக்கத்தின் கேள்விகள்:

1. லஞ்ச- ஊழல் முறைகேடுகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் – ஆசிரியர்களை யூனியன் களில் இருந்து நீக்குவோம், அரசு அவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்ற ஒரு அம்ச கோரிக்கையுடன் போராட தயாரா?

2. சம்பளம் சரி.. ‘கிம்பளம்’ என்ற ஒரு வார்த்தையை உருவாக்கிய அரசு ஊழியர்களே.. என்றாவது ஊதிய உயர்வு அற்ற போராட்டத்தில் மக்கள் நலனுக்காக மட்டும் இறங்கி போராடி உள்ளீர்களா?

3. ஊழலில் வளரும் நாடான இந்தியாவிற்கு உற்ற தோழனாக நிற்கும் அரசு ஊழியர்களே – ஆசிரியர்களே உங்கள் அலுவலகத்தில் உள்ள ஊழல் பெருச்சாளிகளை வெளி கொண்டுவர நீங்கள் தயாரா?

4. வருடந்தோரும் உங்கள் சொத்து விவரங்களை வெளியிட நீங்கள் தயாரா?

5. ஒரு ரூபாய் லஞ்சம் வாங்கியிருந்தால் கூட என்னைத்தூக்கிலிடுங்கள் என கூறிய அரசு அதிகாரி சகாயம் அவர்கள் உள்ள அதே தமிழகத்தில் தான் பாக்கெட்டில் இருக்கும் பத்து ரூபாயையும் லஞ்சமாக பிடுங்கி தன்மானத்தை இழந்து பிச்சை எடுப்போரை யூனியன் என்ற பெயரில் அவர்களை காப்பாற்றுவதை நிறுத்துவீர்களா?

6. அரசு செய்வது தொழிலல்ல, சேவை! என்றாவது சேவை மனப்பான்மையுடன் அலுவலகம் சென்று வந்திருக்கிறீர்களா? மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் நீங்கள் அலுவலகம் வரும் மக்களை, மக்களாக நினைத்து உரிய மரியாதையுடன் சேவை கொடுத்திருக்கிறீர்களா?

7. பல நிகழ்வுகளில் நல்லவன் போல அரசியல்வாதிகள் மீது ஊழல் முத்திரை குத்தும் நல்லவர்களே.. உங்கள் உறுதுணை இல்லாமல் 1 பைசா ஊழல் கூட நடக்க முடியாது. தமிழக சீரழிவிற்கு நீங்கள் ஆற்றிய இந்த பெருந்தொண்டை ஒப்புக் கொள்வீர்களா?

8. தமிழ்நாடு +2 அரசு பாடத்திட்டம் 14 ஆண்டுகளாக மாற்றப்படாமல் இருக்கிறது. பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும் என்று சமூக அக்கறையோடு சுயநலமில்லாமல் மக்களுக்காக என்றைக்காவது போராடி இருக்கிறீர்களா?

9. மக்களுக்கு தடையின்றி வழங்கப்பட கூடிய அரசு சேவைகளின் மக்கள் சாசனம் (Citizen Charter) தத்தம் அலுவலகத்தில் மக்களின் பார்வைக்காக வைப்பீர்களா?