கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி மைசூரில் உள்ள ஒரு உணவகத்தில் தோசை சுட்டு அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

கர்நாடகாவில் நேற்று செவ்வாய்க்கிழமை நரசிபூர் ஹெலவரஹுண்டியில் பிரச்சாரம் செய்த அவர், இன்று இரண்டாவது நாளாக புதன்கிழமை காலை மைசூர் அக்ரஹாராவில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அந்த பகுதியில் உள்ள பிரபல மயிலரி ஹோட்டலுக்குச் சென்று இட்லி மற்றும் தோசை உணவுவகைகளை சுவைத்தார். அவருடன் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே. சிவக்குமார் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் ஆர்.ஜெ. சுர்ஜேவாலா ஆகியோர் இருந்தனர்.

அந்த உணவகத்தில் இருந்தவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பிரியங்கா காந்தி. பின்னர் தோசை மாஸ்டருடன் சேர்ந்து தானும் தோசை சுட்டு மகிழ்ந்தார்.

பிரியங்கா காந்தி மசாலா தோசை சுட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதுடன் “சமையலில் எனது சகோதரி பிரியங்கா காந்திக்கு இரண்டாவது இடம்தான்” என்று ராகுல் காந்தி முன்பு கூறியிருந்ததையும் அதில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மைசூரு பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு சிருங்கேரி செல்லும் அவர் சாமி தரிசனம் முடித்துக்கொண்டு இன்று பிற்பகல் அங்கு பிரச்சாரம் செய்கிறார்.