டில்லி

ருந்துகள் மற்றும் உபகரணங்கள் விற்பனையில் தனியார் மருத்துவமனைகளுக்கு 1737 % லாபம் கிடைப்பதாக தேசிய மருந்துப் பொருள் விலை நிர்ணய கழகம் தெரிவித்துள்ளது.

தனியார் மருத்துவமனைகள் என்றாலே கட்டணங்கள் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும்.    இந்த தனியார் மருத்துவமனைகளில் அவர்களே மருந்துகள் மற்றும் உபகரணங்கள் நோயாளிகளுக்கு அவர்கள் வளாகத்தில் உள்ள கடைகள் மூலம் விற்பனை செய்கின்றனர்.   பொதுவாக ஆன்லைனில் மருந்துகள் வாங்கும் போது விலையில் கழிவு, மற்றும் அதே கலவையுடன் கூடிய விலை குறைவான மருந்துகள் ஆகியவற்றை தேர்வு செய்ய முடியும்.   ஆனால் மருத்துவமனை வளாகத்தில் உள்ள கடைகளில் அந்த மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரைக்கும் கம்பெனி மருந்துகள் மட்டுமே கிடைக்கின்றன.

மேலும்  பல மருத்துவமனைகளில் விற்கப்படும் மருந்துகளும் உபகரணங்களும் அவர்களாலேயே தயாரிக்கப்பட்டது அல்லது அவர்களுக்கு இலவசமாக கிடைப்பதாகவே உள்ளது.    மேலும் மருந்துப் பொருட்களில் குறிப்பிடப் படும் அதிகபட்ச சில்லறை விலை என்பது உண்மையான விலையை விட பன்மடங்கு அதிகமாகவே பெரும்பாலும் உள்ளது.

இவைகள் அனைத்தும் தேசிய மருந்துப் பொருள் விலை நிர்ணயக் கழகத்தின் கட்டுப்பாட்டில் வருவதில்லை.   அதனால் விலை மிகவும் அதிகமாகவே உள்ளன.   சமீபத்தில் டில்லி நகர்ப் பகுதியில் இந்தக் கழகம் 4 புகழ்பெற்ற மருத்துவமனைகளில் ஒரு சில குறிப்பிட்ட மருந்துகள் மற்றும் பொதுவாக அதிகம் உபயோகப்படுத்தும் உபகரணங்கள் ஆகியவற்றின் விலைகளை சோதனை செய்தது.

சோதனையில் இந்த மருந்துகளும்,  உபகரணங்களும் விற்பதினால் தனியார் மருத்துவமனைகளுக்கு 1737% வரை லாபம் கிடைப்பது தெரிய வந்துள்ளது.      உதாரணத்துக்கு  குளுகோஸ் ஏற்ற உபயோகப்படுத்தபடும் இருவகை ஊசிகள்  மருத்துவமனை வாங்கும் விலையானது ரூ. 5.77 மற்றும் ரூ, 5.82 ஆகும்.   இவை ரூ.  106 க்கு விற்கபட்டு மருத்துவமனைகள் முறையே 1737% மற்றும் 1721% லாபம் ஈட்டுகின்றன.

அது மட்டுமின்றி பல மருத்துவமனைகளில் வசூலிக்கப்படும் எக்ஸ் ரே,  ஸ்கான் போன்ற சோதனைக் கட்டணங்களும் மிகவும் அதிகமாகவே உள்ளன எனவும் இந்தக் கழகம் அறிவித்துள்ளது.