டெல்லி: புதிய தனியுரிமை கொள்கையை செயல்படுத்த தடை கோரிய மனு மீது பதிலளிக்க வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது.

டெல்லியை சேர்ந்த கர்மான்யா சிங் ஷரீன் என்பவர் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் சார்பில் பயனாளிகளின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பதில் வாட்ஸ் அப் நிறுவனம் பாகுபாடு காட்டுவதாக வாதிடப்பட்டது.

அப்போது வாட்ஸ் அப், பேஸ்புக் நிறுவனங்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மக்களின் தகவல்களை பாதுகாக்க ஐரோப்பாவில் தனிச் சட்டம் உள்ளது. அது போன்ற சட்டம் இந்தியாவில் இல்லை என்றார். இந்தியாவிலும் அது போன்ற சட்டத்தை இயற்றினால், அது கடைப்பிடிக்கப்படும் என்று வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க வாட்ஸ்அப், பேஸ்புக் நிறுவனங்களுக்கு  நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர்.