சென்னை:

பிரதமர் நரேந்திர மோடி  இலங்கை பிரதமர் ராஜபக்சே இடையே இருநாட்டு உறவுகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.

4நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார், இலங்கைப் பிரதமர் மகிந்த ராஜபக்சே. அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து  குடியரசுத் தலைவா் மாளிகை சென்றார். அங்கு அரசு முறைப்படியான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.  தொடர்ந்து  மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினார்.

பின்னர் டில்லியில் பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கர் ஆகியோரை ஐதராபாத் இல்லத்தில்  சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த ஆலோசனையின்போது இந்தியா-இலங்கை இடையிலான வா்த்தகம், பாதுகாப்பு, கடல்சாா் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றன. இரு நாட்டைச் சேர்ந்த அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர் மோடி,  இந்தியா மற்றும் இலங்கை அண்டை நாடுகள் மட்டுமல்ல, நெருங்கிய நட்பு நாடுகளும் கூட. இதுதரப்புக்கும் இடையே பல கருத்துகள் ஒரே மாதிரியாக அமைந்துள்ளன. இந்தியா, இலங்கைப் பகுதிகளில் பயங்கரவாதம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. இதற்கு இரு நாடுகளும் தக்க பதிலடி அளித்து வருகிறது. இனிவரும் காலங்களில் பயங்கரவாதத்துக்கு எதிரான கூட்டு நடவடிக்கைகளில் இந்தியாவும், இலங்கையும் இணைந்து செயலாற்றும்.

இருநாடுகளுக்கு இடையிலான பொருளாதாரத் திட்டங்கள், வர்த்தக மற்றும் மூலதன ஒப்பந்தங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் இருநாட்டு மக்களையும் இணைக்கும் விதமாக சுற்றுலா வளர்ச்சி குறித்தும் ஆலோசிக்கப்பட்டது என்று தெரிவித்தார்.