டெல்லி: குடியரசு தலைவருக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. அதில்,  தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு, எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவின் வேட்புமனுக்கள்  சரியாக உள்ளதாகவும், அதனால் அவை ஏற்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவின் 14வது குடியரசுத் தலைவராக தற்போதுள்ள  ராம்நாத் கோவிந்த்பதவிக் காலம், வரும் ஜூலை மாதம் 24 ஆம் தேதி முடிவடைகிறது. இதையடுத்து, நாட்டின் 15வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், அடுத்த மாதம் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து வேட்புமனுத்தாக்கல்  கடந்த 15 ஆம் தேதி தொடங்கிய நிலையில், 29 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து இன்று வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெற்றது.

குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரெளபதி முர்மு போட்டியிடுகிறார். எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா களமிறங்கி உள்ளார்.

இந்த நிலையில் குடியரசு தலைவர் தேர்தலுக்கு இதுவரை 87 பேர் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாகவும், அதில் 79 மனுக்கள் உரிய தகுதிகளை பூர்த்தி செய்யாததால் நிராகரிப்பு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும்,  குடியரசு தலைவர் வேட்பாளர்களான, திரௌபதி முர்மு யஷ்வந்த் சின்ஹா ஆகியோரின் வேட்புமனுக்கள் ஏற்பு இருவரின் வேட்புமனு சரியாக இருப்பதாக மாநிலங்களவை செயலகம் அறிவித்து உள்ளது.