டில்லி:

ன்று நாடு முழுவதும் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி பாரதியஜனதா கூட்டணி வேட்பாளரே வெற்றிபெறும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

நாட்டின் 14-வது ஜனாதிபதிக்கான தேர்தல் இன்று காலை 10 மணிக்கு டில்லி பாராளுமன்ற வளாகத்திலும், மாநில சட்டமன்ற வளாகத்திலும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

பாஜக சார்பில் ராம்நாத் கோவிந்தும், எதிர்க்கட்சி வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற சபாநாயகர் மீராகுமாரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

ராம்நாத் கோவிந்துக்கு,  பாஜக  மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான சிவசேனை ஆகியவற்றின் வாக்குகளைச் சேர்த்து அவருக்கு மொத்தம் 5,37,683 வாக்குகள் இருக்கும் நிலையில,  தெலுங்கானா ராஷ்டிர சமிதி, பிஜு ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், அதிமுகவின் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ், தினகரன் அணிகள் ராம்நாத் கோவிந்துக்கு வலிய வந்து தங்களது ஆதரவை தெரிவித்துள்ளன.

இதன் காரணமாக ராம்நாத் கோவிந்த் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது. இதுதவிர சமாஜவாடி கட்சியில் முலாயம் சிங் ஆதரவு எம்.பி., எம்எல்ஏக்களும் ராம்நாத் கோவிந்துக்கு தங்களது வாக்குகளை அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் சார்பாக நிறுத்தப்பட்டுள்ள  மீரா குமார் வெற்றி பெற போதிய வாக்குகள் இல்லை.

மீரா குமாருக்கு,  காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள், திமுக, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், மம்தா கட்சிபோனற்வை தங்களது  ஆதரவை தெரிவித்துள்ளன. இருந்தாலும் இந்த கட்சிகளின் வாக்கு எண்ணிக்கை மீரா குமார் வெற்றிபெற போதுமானது இல்லை. எனவே அவர் வெற்றிபெறுவது கேள்விக்குறியே.

இன்று ஜனாதிபதி தேர்தலுக்கு நாடு முழுவதும்   776 எம்.பி.க்கள், 4120 எம்எல்ஏக்கள் என மொத்தம் 4,896 பேர் வாக்களிக்க இருக்கின்றனர்.

பாராளுமன்றத்தில் ஒரு வாக்குப் பதிவு மையம், மாநில சட்ட சபைகளில் ஒரு வாக்குப்பதிவு மையம் என மொத்தம் 32 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தலுக்காக 33 கண்காணிப்பாளர்களை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

வாக்குப் பதிவு முடிந்த பிறகு அனைத்து வாக்குப் பெட்டிகளும் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டு ஜூலை மாதம் 20 ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, அன்றே தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும்.

அதையடுத்து தற்போதைய ஜனாதிபதி பிரனாப் முகர்ஜியின் பதவி காலம் வரும் 24ந்தேதி முடிவடைவதால்,  புதிய ஜனாதிபதி வரும் 25ந்தேதி பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.