டில்லி

ருத்துவ மாணவி நிர்பயா பலாத்கார கொலையாளிகளில் ஒருவனான பவன் குப்தாவின் கருணை மனுவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார்.

டில்லி நகரில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேருக்குத் தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டது.  அந்த தண்டனையைத் தாமதப்படுத்த அவர்கள் ஒருவர் பின ஒருவராக ஜனாதிபதிக்குக் கருணை மனு அனுப்பி வருகின்றனர்.    இதையொட்டி இருமுறை தூக்குத் தண்டனைக்கான தேதி அறிவிக்கப்பட்டு அதன் பிறகு ஒத்தி வைக்கப்பட்டது.

குற்றவாளிகளில் இதுவரை கருணை மனு அனுப்பாத பவன்குமர் குப்தா சமீபத்தில் ஜனாதிபதிக்குத் தனது கருணை மனுவை அனுப்பி வைத்தான்.  அத்துடன் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுத் தாக்கல் செய்தான்.  அவனது சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.  தற்போது ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவனுடைய கருணை மனுவை நிராகரித்தாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதையொட்டி டில்லி அரசு குற்றவாளிகளைத் தூக்கிலிட புடிய தேதியை அறிவிக்குமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.  இந்த கோரிக்கை மனுவைக் கூடுதல் செஷன்ஸ் நீதிபதி விரைவில் விசாரணைக்கு எடுக்க உள்ளார்.  திகார் சிறை நிர்வாகமும் குற்றவாளிகளைத் தூக்கிலிட புதிய தேதியை அறிவிக்கக் கோரி நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளது.