டெல்லி:  குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில்,  நடிகர் அஜித் குமாருக்குகுடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பத்ம பூஷண் விருதை  வழங்கி கவுரவித்தார்.

மத்தியஅரசு சார்பில் நடப்பாண்டுக்கான பத்ம விருதுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டன. அதன்படி, இந்த ஆண்டு 7 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகள், 19 பத்ம பூஷண் விருதுகள், 113 பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தன.

இதில்,  தமிழகத்தை சேர்ந்த தொழிலதிபர் நல்லி குப்புசாமி, நடிகர் அஜித்குமார், நடிகை ஷோபனா சந்திரகுமார், ஆந்திராவை சேர்ந்த நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா, பிஹார் முன்னாள் துணை முதல்வர் மறைந்த சுஷில் குமார் மோடி உள்ளிட்ட 19 பேருக்கு பத்ம பூஷண் விருதுகளும், தமிழகத்தை சேர்ந்த குருவாயூர் துரை.கே.தாமோதரன், லட்சுமிபதி ராமசுப்பையர் (தினமலர்), எம்.டி.ஸ்ரீநிவாஸ், புரிசை கண்ணப்பா சம்பந்தன், ஆர்.ஜி.சந்திரமோகன், கிரிக்கெட் வீரர் ஆர்.அஸ்வின், ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி, சீனி விஸ்வநாதன், பறை இசைக் கலைஞர் வேலு ஆசான் ஆகிய 10 பேர் உட்பட 113 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் அறிவிக்கப்பட்டன.

இந்த பத்ம விருதுகள் வழங்கும் விழா  தலைநகர் டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று  (ஏப்.28) நடைபெற்றது.

இவ்விழாவில், தமிழகத்தைச் சேர்ந்த திரைப்பட நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருதினை குடியரசுத் தலைவர் திரவுபதி வழங்கி கவுரவித்தார். இவ்விழாவில் நடிகர் அஜித் குமாரின் மனைவி ஷாலினி மற்றும் குடும்பத்தினர் கலந்துகொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இதுபோல தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா, திரைப்பட இயக்குநர் சேகர் கபூர், பிஹார் முன்னாள் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி (மறைவு), பங்கஜ் ஆர்.படேல், வினோத் குமார் தாம், டாக்டர் ஜோஸ் சாக்கோ பெரியப்புரம், டாக்டர் ஏ.ஏ.சூர்ய பிரகாஷ், ஸ்ரீஜேஷ், பங்கஜ் கேஷுபாய் உதாஸ் (மறைவு) ஆகிய 10 பேர் நேற்று பத்ம பூஷண் விருதை பெற்றுக் கொண்டனர்.

ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி (ஸ்தபதி), முனைவர் லட்சுமிபதி ராமசுப்பையர் (தினமலர்), கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், கே.தாமோதரன் (செப்), பாடகர் அரிஜித் சிங், கணேஷ்வர் சாஸ்திரி திராவிட், டாக்டர் ஷ்யாம் பிஹாரி அகர்வால், பேராசிரியர் நிதின் நோரியா, ஸ்டீபன் நாப், ஷீன் காப் நிஜாம் உள்ளிட்ட 57 பேர் நேற்று பத்மஸ்ரீ விருதை பெற்றுக் கொண்டனர்.

பத்ம விருதுகளைப் பெற்றவர்கள் இன்று தேசிய போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த உள்ளனர். இதையடுத்து. குடியரசுத் தலைவர் மாளிகை மற்றும் பிரதமரின் அருங்காட்சியகத்தை சுற்றிப் பார்க்க உள்ளனர்.

பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு குடியரசு தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ ஆகிய 3 பிரிவுகளின் கீழ் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. கல்வி, இலக்கியம். அறிவியல், விளையாட்டு, சுகாதாரம், தொழில், வர்த்தகம், பொறியியல், பொது விவகாரங்கள். குடிமைப் பணி மற்றும் சமூக சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களை கவுரவிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்படுவது நினைவுகூரத்தக்கது.