சென்னை: நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி முடிவுகளை எடுக்க விஜயகாந்திற்கு அதிகாரம் வழங்கியும், தேமுதிக பொதுச்செயலாளராக விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்தை நியமனம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த், உடல் நலக்குறைவு காரணமாக வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்று வருகிறார். சமீபத்தில் அவரது உடல்நிலை மீண்டும் பாதிக்கப்பட்ட நிலையில்,  சென்னை மியாட் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்தார்.  பின்னர் உடல் நலம் பெற்றதையடுத்து கடந்த வாரம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இதைத்தொடர்ந்து,  தேமுதிக செயற்குழு, பொதுக்குழு கூட்டம்  டிசம்பர் 14ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று சென்னை திருவேற்காட்டில் தேமுதிகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பங்கேற்றுள்ளார்.  இக்கூட்டத்தில், அனைத்து செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர். கூட்டத்துக்கு வருகை தந்த  விஜயகாந்தை பார்த்ததும்  தேமுதிக நிர்வாகிகளும், தொண்டர்களும்  உற்சாகம் அடைந்தனர்.

இதைத்தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி,  தேமுதிக பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்தை நியமனம் செய்து தேமுதிக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதுபோல, 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி முடிவுகளை எடுக்க விஜயகாந்திற்கு அதிகாரம் வழங்குவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.

பிரேமலதா விஜயகாந்த் பொதுச்செயலாளர் என்று அறிவிக்கப்பட்டவுடன், தேமுதிக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் ஒரு சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, ‘வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக நிறுவனத்தலைவர் கேப்டன் விஜயகாந்த் தலைமையில் கழக தொண்டர்கள் அனைவரும் ஒருமையுடனும், முழுவேகத்துடனும் பணியாற்றிட இந்த பொதுக்குழு உறுதிகொள்கிறது. நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி அமைப்பது பற்றியும், தேர்தல் யுத்திகளை வழிவகுக்கவும் தேமுதிக நிறுவனத்தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு முழு அதிகாரம் வழங்கி தேமுதிக பொதுக்குழு இத்தீர்மானத்தை நிறைவேற்றுகிறது.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தேமுதிகவின் கட்சி நிறுவன தலைவராக மட்டும் விஜயகாந்த் தொடர்கிறார்.

தற்போது பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரேமலதா விஜயகாந்த், தேமுதிகவின் பிரசார பீரங்கியாக வலம் வந்தார்.   கடந்த 2011 தேர்தலில் தேமுதிகவுக்காக பரப்புரை மேற்கொண்ட பிரேமலதா, 2018ல் பொருளாளர் ஆனார். தற்போது  (2023) இறுதியில் பொதுச் செயலாளராகியுள்ளார்.

2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது தேமுதிக. அப்போது, எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராக சட்டமன்றத்தில் அமர்ந்தார். திமுக, அதிமுகவிற்கு மாற்றாக  தமிழ்நாட்டில் மூன்றாவது அணியாக உருவெடுத்த தேமுதிக கட்சி,  அதன்பிறகு அவரது பேச்சு, நடவடிக்கை, செயல் காரணமாக பின்னடைவை சந்தித்தது.  அதன்பிறகு மெல்ல மெல்ல தேமுதிக காணாமல் போக தொடங்கியது.

இதற்கிடையில், விஜயகாந்திற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவரால் சரிவர பேசமுடியாத நிலை ஏற்பட்டதில் இருந்து அவரது மனைவியும் தேமுதிகவின் பொருளாளருமாக இருந்த பிரேமலதாவே கட்சியை நடத்தி வந்தார். 2016 சட்டமன்ற தேர்தல், 2019 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரங்களில் விஜயகாந்தின் முகத்தை காட்டி, அவர் கையசைப்பதை மட்டுமே வைத்து வாக்கு சேகரித்து வந்தார் பிரேமலதா. கொரோனா கால கட்டத்திற்கு பிறகு விஜயகாந்தின் உடல்நிலை மோசமடைந்த நிலையில், அவரது முகத் தோற்றமும் மாறத் தொடங்கியது. அதனால், பிறந்தநாளாக இருந்தாலும் திருமண நாளாக இருந்தாலும் விஜயகாந்துடன் அவர் குடும்பத்தினர் புகைப்படம் எடுக்கும்போதெல்லாம் அவருக்கு மாஸ்க் அணிவிக்கப்பட்டு எடுத்து கொண்டிருந்தனர்.

இப்படிப்பட்ட சூழலில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கனவே, இண்டியா கூட்டணியும் தேசிய ஜனநாயக கூட்டணியும் தேமுதிக-வை புறக்கணித்துள்ள நிலையில், கட்சிக்கு புத்துயிர் ஊட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருந்தது, இதனால், கட்சி கட்டமைப்பில் விரைவில் மாற்றங்கள் நிகழும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது தேமுதிகவின் பொதுச்செயலாளராக பிரேமலதா நியமிக்கப்பட்டுள்ளார்.