டில்லி

க்கிய ஜனதா தள தேசிய துணை தலைவர் பிரசாந்த் கிஷோர் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை கடுமையாக தாக்கி உள்ளார்.

நடைபெற உள்ள மக்களவை தேர்தலை ஒட்டி நாடெங்கும் அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் நடத்தி வருகின்றன. ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநிலத்தில் தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்துக் கொள்கிறார். நேற்று முன் தினம் சந்திரபாபு நாயுடு ஒரு பிரசாரக் கூட்டத்தில் பேசி உள்ளார்.

அந்த  பிரசாரக் கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு, “தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஒரு கிரிமினல் அரசியல் நடத்தி வருகிறார். காங்கிரசில் இருந்தும் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்தும் அவர் சட்டப்பேரவை உறுப்பினர்களை கவர்ந்துள்ளார்.  பீகார் கொள்ளைக்காரரான பிரசாந்த் கிஷோர் ஆந்திராவில் இருந்து லட்சக்கணக்கான வாக்காளர்களை நீக்கி உள்ளார்.

பீகார் ஆசாமி ஆன பிரசாந்த் கிஷோர் ஆந்திராவில் படிவம் 7 மூலம் முறைகேடு நடத்தி உள்ளார். அவர் தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவாக இருந்த லட்சக்கணக்கான வாக்காளர்களை நீக்கி உள்ளார். அதன் மூலம் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சிக்கு உதவி இருக்கிறார். அது மட்டும் அன்றி ஐதராபாத் நகரில் நடைபெற்ற லட்சக்கணக்கானோர் விவரங்கள் திருட்டுக்கு பின்னணியிலும் அவர் இருக்கிறார்.” என பேசினார்.

இது குறித்து ஐக்கிய ஜனதா தள தலைவர் பிரசாந்த் கிஷோர் தனது டிவிட்டரில் சந்திர சேகர நாயுடுவுக்கு, “தரமற்ற வார்த்தைகளை பேசி உங்கள் தராதரத்தை தாழ்த்திக் கொள்வதை நிறுத்துங்கள். இதன் மூலம் உங்களுக்கு பீகார் மாநிலத்தின்  மீது உள்ள பாரபட்சமும், உங்கள் தீமையான எண்ணமும் வெளிப்பட்டுள்ளது.

இவ்வாறு பேசுவதை நிறுத்தி விட்டு ஆந்திராவில் மீண்டும் மக்கள் உங்களுக்கு வாக்களிக்க வேண்டியதை கவனியுங்கள். தேர்தலில் படு தோல்வி அடைந்தால் ஒரு நல்ல அரசியல்வாதியும் பாழாகி விடுவார். எனவே சந்திரபாபு நாயுடுவின் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் எனக்கு வியப்பை அளிக்க வில்லை.” என பதிந்துள்ளார்.