முதன்முதலாக களத்தூர் கண்ணம்மா திரைப்படம் மூலம் கலைத்துறைக்கு அறிமுகமானார் கமலஹாசன். ஆகஸ்ட் 12, 1960-ல் இந்தப் படம் வெளியானது.அதன்படி இந்த ஆண்டோடு கமலின் கலைத்துறை வாழ்க்கை 60 ஆண்டுகளை எட்டுகிறது.

இதனை முன்னிட்டு கமலை தியாகராய நகரில் உள்ள சிவாஜி கணேசன் இல்லமானஅன்னை இல்லத்துக்கு அழைத்து விருந்து கொடுத்துள்ளார் பிரபு . அவருக்கு நினைவுப்பரிசு வழங்கி மகிழ்ந்தனர்.

சிவாஜி கணேசன் குடும்பத்தினர் தரப்பில் நடிகர் பிரபு, அவரது சகோதரர் ராம்குமார், நடிகர் விக்ரம் பிரபு ஆகியோர் வழங்கிய நினைவுப்பரிசில் “அரிதாரம் முதல்தாரம் ஆன நடிப்பின் அவதாரம் சிவாஜி. அவா் வெள்ளித்திரை விஞ்ஞானி. அவரின் தலைமகன் நீ கலைஞானி. நடிகா் திலக நாயகன் பாராட்டிய உலக நாயகனே. நீ நடிப்பை ஆண்டு, ஆனது அறுபது ஆண்டு. நீ ஊரை ஆண்டு, உலகை ஆண்டு, வாழ்ந்திடுக நூறாண்டு” என்று எழுதப்பட்டிருந்தது.

 

இந்நிலையில் இது குறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “அன்னை இல்லத்தில் அறுசுவை விருந்து. வழக்கம் போல் நிறைய அன்பும் பரிமாறப்பட்டது. தம்பி பிரபு வாசித்து அளித்த பாராட்டு மடலின் வாசகங்கள் என்னைக் கண் கலங்க வைத்தது. மனது புன்னகைத்தது” என்று பதிவிட்டுள்ளார்.