வாடிகன்

தீவிபத்தில் சிக்கிய பிரான்ஸ் நாட்டு நோட்ரெ டாம் தேவாலயத்தை சீரமைக்க கத்தோலிக்க கிறித்துவ தலைவர் போப் ஆண்டவர் நிதி உதவி கோரி உள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிசின் 850 ஆண்டு பழமையான நோட்ரே டாம் தேவாலயம் நேற்று தீப்பிடித்து எரிந்தது. மேற்கூரையில் முதலில் பிடித்த தீ மளமளவென பரவியது. மேற்கூரை, கோபுரம் உள்ளிட்ட பல பகுதிகள் இடிந்து விழுந்துள்ளன. இந்த விபத்து உலகெங்கும் உள்ள அனைத்து மக்களிடையே கடும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.

அகில உலக கத்தோலிக்க கிறித்துவ தலைவர் போப் ஆண்டவர், “தீ விபத்தால் நோட்ரெ டாம் தேவாலயம் பெரிதளவில் சேதம் அடைந்துள்ளது. அதை உடனடியாக மீண்டும் கட்டியாக வேண்டும். அதனால் உலகில் உள்ள அனைவரும் தங்களால் முடிந்த நிதி உதவியை நன்கொடையாக அளிக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த தேவாலயத்தை சீரமைக்க உலகில் உள்ள பல செல்வந்தர்கள் நிதி உதவி அளித்து வருகின்றனர். பிரான்ஸ் நாட்டின் மிகப் பெரிய எண்ணெய் நிறுவனமான டோடல் 10 கோடி யூரோ அளித்துள்ளது. பிரபல ஹாலிவுட் நடிகை சல்மா ஹேயக் கணவர் ஹென்றி 10 கோடி யூரோ நன்கொடை அளித்துள்ளார். பிரான்ஸ் நாட்டின் மிகப் பெரிய செல்வந்தர் நன்கொடையாக பெர்னார்ட் அர்னால்ட் 20 கோடி யூரோ அளித்துள்ளார்.