சென்னை:
தமிழகத்தில் பொங்கல் பரிசு வழங்க சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்த நிலையில், தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க சென்னை உயர்நீதி மன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
இன்னும் ஓரிரு நாளில் பொங்கல் பண்டிகை வர இருப்பதால், தமிழக அரசு கடந்த 7ந்தேதி முதல் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் பொங்கல் பரிசை அறிவித்து, வழங்கி வருகிறது.
பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய், 2 அடி நீள கரும்புத்துண்டு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்க பணமும் வழங்கப்பட்டது.
இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கை விசாரிக்க சென்னை உயர்நீதி மன்றம், அரசின் அறிவிப்புக்கு கடுமையான கண்டங்களை தெரிவித்த நிலையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு தான் பொங்கல் பரிசு வழங்க வேண்டும். வறுமை கோட்டிற்கு மேலுள்ளவர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.1000 வழங்கக் கூடாது எனக்கூறி நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது.
இது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப் படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதிமுக வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம் பொங்கல் பரிசு வழங்க விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி முறையீடு செய்துள்ளார். ஆனால் அவரது முறையீட்டை ஏற்க உயர்நீதி மன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. வழக்கு தொடர என்ன ஆவணங்கள் உள்ளது என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.