சென்னை: தமிழ்நாட்டில், அறநிலையித்துறையின்கீழ் பணியாற்றும் திருக்கோயில் பணியாளர்களுக்கு பொங்கல் கருணைக்கொடை 2000 ரூபாய் வழங்கப்படும் என்றும், அகவிலைப்படி உயத்தப்படுவதாகவும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

அரசு ஊழியர்களுக்கு வழங்கியதுபோல் திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் மற்றும் பொங்கல் கருணைக்கொடை ரூ.2000 ஆக உயர்த்தி வழங்கப்படும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். 

இதுகுறித்து,  தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, “திருக்கோயில்களின் வளர்ச்சிக்கும், திருக்கோயில் சொத்துகளைப் பாதுகாக்கவும், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், திருக்கோயில் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்திவருகிறது.

தற்போது அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நிரந்தரப் பணியாளர்களுக்கு 01.01.2022 முதல் அகவிலைப்படியை 17 விழுக்காட்டிலிருந்து 31 விழுக்காடாக நிர்ணயம் செய்து வழங்க உத்தரவிடப்படுகிறது.

இதன்படி அர்ச்சகர்கள், சீட்டு விற்பனையாளர்களுக்கு 2,500 ரூபாய், காவல் பணியாளர்களுக்கு 2,200 ரூபாய், தூய்மைப் பணியாளர்களுக்கு 1,400 ரூபாய் மாதச்சம்பளம் உயரும். இதன்மூலம் சுமார் 10,000 திருக்கோயில் பணியாளர்களின் வாழ்வாதாரம் மேம்படும்.

அதேபோல் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் பணியாற்றும் முழுநேரம், பகுதிநேரம், தொகுப்பூதியம், தினக்கூலி பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்துப் பணியாளர்களுக்கும் 1000 ரூபாய் ஆக வழங்கப்பட்டுவந்த பொங்கல் கருணைக்கொடை இவ்வாண்டில் 2000 ரூபாய் ஆக உயர்த்தி வழங்கப்படும். இதனால் இவ்வாண்டு 1.5 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்.

கொரோனா நோய் தொற்றுக் காலத்தில், மாத ஊதியம் பெறாத பூசாரிகள், இதர அர்ச்சகர்களுக்கு ஊக்கத் தொகை 4,000 ரூபாய், 15 மளிகைப்பொருள்கள் கொண்ட தொகுப்புகள் வழங்கப்பட்டன. துறை நிலையிலான ஓய்வுப் பெற்ற அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், இசை கலைஞர்கள் முதலானவர்களுக்கு வழங்கப்பட்டுவந்த ஓய்வூதியம் 1,000 ரூபாயை 3,000 ரூபாயாக உயர்த்தி வழங்க ஆணையிடப்பட்டது.  கிராமக் கோயில் பூசாரிகளுக்கு ஓய்வூதியம் 3,000 ரூபாயை 4,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

திருக்கோயிலில் பக்தர்கள் மொட்டை போடுவதற்கான கட்டணம் விலக்களித்து, அப்பணியை மேற்கொள்ளும் நபர்களுக்கு மாதந்தோறும் 5,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுவருகிறது. திருக்கோயில் அர்ச்சகர்கள், இதர பணியாளர்களுக்கு பொங்கல் திருநாளை முன்னிட்டு இரண்டு செட் புத்தாடைகள் வழங்கப்பட்டுவருகின்றன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]