புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 369 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதார இயக்குநர் மோகன்குமார் கூறி இருப்பதாவது: புதுச்சேரியில் 1,089 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் 317 பேருக்கும், காரைக்காலில் 52 பேருக்கும் என 369 பேருக்கு தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் இதுவரை 7,355 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் 1,060 பேர், காரைக்காலில் 51 பேர், ஏனாமில் 61 பேர் என 1,172 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட மொத்தமாக 3,025 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று புதுச்சேரியில் 147 பேர், காரைக்காலில் 9 பேர், ஏனாமில் 59 பேர் என மொத்தம் 215 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

4 நாட்களில் மட்டும் 1,483 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒட்டு மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்துவிட்டது. எனவே பொதுமக்கள் தேவையின்றி வெளியே நடமாடக் கூடாது என்று தெரிவித்தார்.