ஸ்டேஷனிலேயே கூட்டுப் பலாத்காரம்..  கர்ப்பமான சிறுமியை மிரட்டிய போலீசார்.

ஒடிசா மாநிலம் சுந்தர்கர் மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயதான சிறுமி ஒருவர் கடந்த மார்ச் மாதம் பிராமித்பூரில் கண்காட்சிக்கு வந்துள்ளார்.  அப்போது நேரமாகி விட்டதால் ஊரடங்கினால் தன் சொந்த ஊருக்குச் செல்ல போக்குவரத்து ஏதுமின்றி தவித்துள்ளார்.  அப்போது அங்கு ரோந்துப்பணியிலிருந்த பிராமித்பூர் காவல் ஆய்வாளர் சந்திர மஜி தலைமையிலான போலீசார் சிறுமியை விசாரணைக்கான காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.  ஆனால் காவல் ஆய்வாளர் மற்றும் சில போலீசாரும் ஒன்று சேர்ந்து அச்சிறுமியைக்  கூட்டுப் பாலியல் வன்முறை செய்து பின்னர் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த கும்பலின் நாசகாரச்செயலால் அச்சிறுமி கர்ப்பமடைந்துள்ளார்.  விவரம் தெரியவந்ததும் அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர் சந்திர மஜி உள்ளூர் மருத்துவர்களின் உதவியோடு கடந்த ஜூன் மாதம் இச்சிறுமிக்குக் கருக்கலைப்பு செய்துள்ளார்.  இதுபற்றி தற்போது மாநில குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிக்குப் புகாராகச் செல்லவே இந்த கொடுஞ்செயல் தற்போது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.

பலாத்காரத்திற்குத் தலைமை தாங்கிய  இன்ஸ்பெக்டர் சந்திர மஜி உடனடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். மேலும் சில போலீசார் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே போலீசாரின் இந்த கூட்டுப் பலாத்காரம் வெட்கக் கேடானது என்றும், நடந்த சம்பவத்திற்குச் சிறுமியிடம் தான் மன்னிப்பு கேட்பதாக மாநில டிஜிபி அபய், தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

சமூகத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் உள்ள போலீசார் எல்லா மாநிலங்களிலும் அக்கப்போர் புரிவதில் ஒரே மாதிரியாகத்தான் இருப்பார்கள் போல

– லெட்சுமி பிரியா