செங்கல்பட்டு: மாமல்லபுரம் பகுதியில் செயல்பட்டு வரும்  விருந்தினர் மாளிகையில் பதுக்கி வைத்திருந்த ரூ.40 கோடி மதிப்பலான 12 பழங்கால சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சிலைகளை வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற காஷ்மீர் வியாபாரி கைது செய்யப்பட்டார்.

மாமல்லபுரம் பகுதியில் ஐடியல் கடற்கரை விருந்தினர் மாளிகை உள்ளது. இங்கு விலை மதிப்புள்ள பார்வதி சிலை ஒன்று வெளிநாட்டுக்கு கடத்தி செல்ல பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  இதையடுத்து, அங்கு கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் ஏடிஜிபி ஜெயந்த் முரளி தலைமையிலான சிலை தடுப்பு பிரிவினர் அதிரடியாக சாதனை நடத்தினர். அப்போது, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த சிலைகள் கண்டு பிடிக்கப் பட்டது.

கி.பி. பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால நடராசர் சிலை, மிகவும் தொன்மையான பார்வதி சிலை, மிகவும் அரிதான ராவணன் சிலை என ஒன்பது தொன்மைவாய்ந்த சிலைகள் உள்பட 12 சிலைகள் கைப்பற்றப்பட்டு உள்ளது.

இதுகுறித்து செய்தியளார்களை சந்தித்த  ஏடிஜிபி ஜெயந்த் முரளி, “மிகவும் தொன்மையான சிலைகளை வாங்கும் பழக்கம் உடைய இஸ்லாமியர் ஒருவர் மூலம், மகாபலிபுரத்தில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில்  தொன்மையான பார்வதி சிலை ஒன்றை விற்பனை செய்ய உள்ளதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு நடத்தப்பட்ட சோதனையில்,  பார்வதி சிலைக்கு பதிலாக 11 பழங்கால சிலைகள் அங்கு ஒரு பெட்டிக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அந்த சிலைகள் கைப்பற்றப்பட்டு உள்ளது.

இந்த  சிலைகளை பதுக்கி வைத்திருந்த ஜாவித்ஷா என்பவரை போலீசார் பிடித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஐடியல் கடற்கரை  சொகுசு விடுதியில்,  மண்ணுக்குள் புதைத்து வைத்திருந்த பார்வதி சிலையை தோண்டி எடுத்து ஜாவித்ஷா போலீசாரிடம் ஒப்படைத்தார்.  மிகவும் பழமையான அந்த பார்வதி சிலை உள்பட போலீசார் கைப்பற்றிய இதர 11 சிலைகளையும் வெளிநாட்டுக்கு கடத்தி செல்ல ஜாவித்ஷா திட்டமிட்டு இருந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

கைது செய்யப்பட்ட ஜாவித்ஷா காஷ்மீரை சேர்ந்தவர். அவரது சகோதரர் ரியாஸ் தொன்மையான சிலைகளை தமிழகத்தில் இருந்து கடத்திச்சென்று வெளிநாடுகளில் விற்பனை செய்யும் தொழில் செய்பவர் என்பது தெரிய வந்துள்ளது. மேலும், ஜாவித்ஷா  தஞ்சாவூரில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றில் சிலைகளை விற்பனை செய்யும் கடை ஒன்றையும் நடத்தி வந்துள்ளார். ஜாவித்ஷா  சகோதரர் ரியாசை தேடி வருவதாகவும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து கூறிய தொல்லியல்துறை அதிகாரிகள்,  கைப்பற்றப்பட்ட 12 சிலைகளில் 8 சிலைகள் மிகவும் தொன்மை வாய்ந்தவை என்றும்,  இவற்றின் மதிப்பு ரூ.30 முதல் ரூ.40 கோடி வரை இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த சிலைகள் 11-ம் நூற்றாண்டை சேர்ந்தவையாக இருக்கலாம். மீட்கப்பட்டுள்ள இந்த சிலைகள் எந்த கோவிலில் இருந்து திருடப்பட்டவை என்பது பற்றி விசாரித்து வருகிறோம். இந்த சிலைகளில் மிகவும் அரிதானது ராவணன் சிலை ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.